இந்தியாவில் முன்னணி சுகாதார ஆய்வு அமைப்புகளான, இந்திய சுகாதார ஆய்வு மன்றம் தேசிய கிருமியியல் ஆய்வுக் கழகம் ஆகிய இரண்டும் புதிய 'டெல்டா பிளஸ்' கொவிட்-19 உருமாற்றக் கிருமிக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனைச் சோதிக்க உள்ளன. ஆய்வில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கொவிஷீல்ட் ஆகிய தடுப்பூசி மருந்துகள் உட்படுத்தப்பட உள்ளன.
டெல்டா பிளஸ் கிருமியால் இந்தியாவில் மகராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 40 பேர் வரையில் 'டெல்டா பிளஸ்' தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. டெல்டா பிளஸ் கிருமி மிகுந்த வீரியத்துடன் பரவும் தன்மைகொண்டது என கூறப்படுகிறது.
டெல்டா பிளஸ் உருமாற்றக் கிருமி வேகமாகப் பரவும் தன்மை, நுரையீரல் உயிரணுக்களில் அதிகமாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சையை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டது என்று தேசிய கிருமியியல் ஆய்வுக் கழகத்தின் டாக்டர் பிரக்யா யாதவ் கூறியுள்ளார்.
"இந்த அடிப்படையில் பார்க்கும்போது, டெல்டா பிளஸ் கவலை தரக்கூடியதாக இருக்கக்கூடும், மேலும் அதிக கண்காணிப்பு தேவை. பரவலைக் குறைக்க பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்," என்றார் அவர்.
ஆய்வுக்குத் தேவையான கிருமி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆய்வு தொடங்கப்படும் என்றும் டாக்டர் யாதவ் கூறினார்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் உருமாற்றக் கிருமியால் பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மற்ற நால்வரும் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாராங் கூறினார்.
சென்னையில் 'டெல்டா பிளஸ்' தொற்று உறுதி செய்யப்பட்ட பெண், குணமடைந்து நலமுடன் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
டெல்டா பிளஸ் இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலந்து, ஜப்பான், நேப்பாளம், சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

