முகக்கவசம் அணிவது, வகுப்புக்குத் திரும்பும் மாணவர்களுக்கு நிலையான இருக்கை உள்ளிட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் ஜூன் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று (ஜூன் 28) மீண்டும் திறக்கப்பட்டன.
நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் தொடக்கநிலை 4 முதல் 6, உயர்நிலை 3 முதல் 5, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கும் மில்லெனியா கல்வி நிலைய மாணவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் இடைவேளை விடப்படும். அவர்களின் உடல்வெப்பநிலையும் பரிசோதிக்கப்படும்.
“நம் மாணவர்களின், கல்வியாளர்களின், பள்ளிப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங், ஃபேஸ்புக் வழியாக இன்று தெரிவித்தார்.
உயர்நிலை 1, 2 மாணவர்கள் நாளை மறுநாள் வரையிலும் தொடக்கநிலை 1 - 3 மாணவர்கள் ஜூலை 6ஆம் தேதி வரையிலும் வீட்டிலிருந்தபடி கல்வி கற்பர்.
இதற்கிடையே, ஆசிரியர்கள், உணவக விற்பனையாளர்கள் உட்பட பள்ளிகளில் பணியாற்றுவோரில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தகுதியுள்ள 311,000 மாணவர்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சு கூறியது. அவர்களில் கிட்டத்தட்ட 92% மாணவர்கள் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
(இந்தச் செய்தியின் விரிவாக்கம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)