ஊரடங்கு கால வரம்பின்றி நீட்டிப்பு
மலேசியாவில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 150 பில்லியன் மலேசிய ரிங்கிட் (S$48.4 பி.) மதிப்பிலான உதவித் திட்டத்தை மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்து இருக்கிறார்.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் உதவ இந்த 'மக்கள் பாதுகாப்பு, பொருளியல் மீட்பு' தொகுப்புத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
"பத்து பில்லியன் ரிங்கிட் நேரடி நிதி ஆதரவாக வழங்கப்படும்," என்று தொலைக்காட்சிவழி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது திரு முகைதீன் குறிப்பிட்டார்.
"ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவலை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், மலேசியர்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்களையும் நிலைமை மேம்படும் வரையிலும் உதவி தொடர வேண்டும் என்பதையும் அறிந்துள்ளேன்," என்றார் அவர்.
சிறப்பு கொவிட்-19 உதவித் திட்டத்தின்கீழ் 11 மில்லியன் பேர்க்கு, குறிப்பாக வயதானோர்க்கும் இன்னும் திருமணமாகாதோர்க்கும் உதவ 4.6 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். அதன்படி, கீழ்நிலையிலுள்ள 40 விழுக்காட்டினர்க்கும் இடைநிலையில் உள்ள 40 விழுக்காட்டினர்க்கும் 250 முதல் 1,300 ரிங்கிட் வரை கிடைக்கும்.
கொரோனா பரவல் காரணமாக வருமானம் இழந்தோர்க்கு உதவ 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். இதன்மூலம் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களுக்குத் தலா 500 ரிங்கிட் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தமாதம் 1ஆம் தேதியில் இருந்து மலேசியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நடமாட்டக் கட்டுப்பாடுகள் முடிவடையவிருந்த நிலையில், அவை கால வரம்பின்றி நீட்டிக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4,000க்கு மேல் இருந்து வருவதாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டினர் இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வது, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான மூன்றாவது காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் தவணைக் காலம்
மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு
புதிய உதவித்திட்டத்தின்கீழ், வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்த தனிநபர்களுக்கும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கும் மேலும் ஆறு மாத கால நீட்டிப்பு வழங்கப்படும்.
முன்னதாக, கடந்த மாதமும் 40 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித் திட்டத்தைப் பிரதமர் முகைதீன் அறிவித்திருந்தார்.
ஆனால், நேரடி நிதி ஆதரவாக ஐந்து பில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டதால் அத்திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து அரசியல்வாதிகள் சிலர் குறைகூறினர்.
இதற்கிடையே, மலேசியாவில் நேற்று புதிதாக 5,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட, மொத்த பாதிப்பு 739,266 ஆனது. அங்கு இதுவரை 4,900க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர்.

