சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்காகத் திறக்கப்படும் புதிய மருத்துவ நிலையங்களில் மருத்துவச் சேவை
யுடன் மனநல ஆதரவும் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
தேசிய சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்புக்கு அளவுக்கு அதிகமான சுமை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதே இந்தப் புதிய மருத்துவ நிலையங்களின் இலக்கு.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக கட்டப்படும் ஆறு வட்டார மருத்துவ நிலையங்களையும் பெரிய தங்குவிடுதிகளில் அமைக்கப்படும் மூன்று மருத்துவ நிலையங்களையும் ஏற்று நடத்தும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க மனிதவள அமைச்சு ஏலக்குத்தகை நடத்துகிறது.
புதிய மருத்துவ நிலையங்கள் வரும் நவம்பர் மாதம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் ஆறு வட்டாரங்களில் இப்புதிய மருத்துவச் சேவை வழங்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் 40,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்படும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு வட்டார மருத்துவ நிலையம், வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் இடத்தில் அமைக்கப்படும் மருத்துவ நிலையங்கள், குறைந்தது இரண்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள், 24 மணி நேரத் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை, ஆம்புலன்ஸ்
மற்றும் சிறப்புப் போக்குரவரத்துச் சேவைகள் இருக்கும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இயங்கி வரும் 13 நிலையங்களுக்குப் பதிலாக ஒன்பது வட்டார மருத்துவ நிலையங்கள் இயங்கும்.
எதிர்காலத்தில் குறைவான மருத்துவ நிலையங்கள் இருக்கும் என்றபோதிலும் நிலையங்களின் தரம் தற்போதைய நிலையைவிட இன்னும் உயர்வாக இருக்கும் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
உதாரணத்துக்கு, இயன் மருத்துவ மையம் போன்று பல்வேறு வசதிகள் இந்தப் புதிய நிலையங்களில் அமைக்கப்படக்கூடும்.
எதிர்காலத்தில் புதிய கிருமித்தொற்று தலைதூக்கினால் அதனால் பாதிப்படையாத
அளவுக்கு இந்த மருத்துவ நிலையங்களை அமைக்க மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
காய்ச்சல், சுவாசத் தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக உயர்தர காற்று வடிகட்டி கொண்ட இடங்களை அமைப்பது போன்ற திட்டங்கள் ஆராயப்படுகின்றன.
"வெளிநாட்டு ஊழியர்களுக்காக நிரந்தர மருத்துவ ஆதரவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம். இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இனி வரும் மாதங்களில் மேலும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்," என்று அமைச்சர் டான் தெரிவித்தார்.
முதல்கட்ட பராமரிப்புக்கான செலவை ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் நிலையாக வைத்திருப்பது அவசியம் என்று
டாக்டர் டான் வலியுறுத்தினார்.
மருத்துவ நிலையத்தை அமைக்கவும் அதை இயக்க ஏற்படும் செலவை ஈடுகட்டவும் வழங்கப்படும் சேவைகளுக்கு மருத்துவ நிலையங்களால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஏலக்குத்தகை ஆவணங்கள் தெரிவித்தன.
வர்த்தகம் நீடித்து நிலைத்
திருக்க மருத்துவ நிலையங்களை நடத்தும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும்போதிலும் மருத்துவச் சேவை நாடும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமாளிக்க முடியாத செலவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று மனிதவள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவ நிலையங்களைச் சிறப்பாக நடத்த எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
கட்டண வரையறைகள் நிர்ணயிக்கப்படுமா என்பது குறித்து இப்போதைக்குச் சொல்ல முடியாது என்றார் அவர்.
ஏற்புடைய, நியாயமான மருத்துவக் கட்டணம் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடையற்ற மருத்துவச் சேவை கிடைப்பதைப் புதிய மருத்துவ நிலையங்கள் உறுதி செய்யும் என்று மனிதவள அமைச்சின் பராமரிப்புப் பிரிவின் மருத்துவ இயக்குநர் டாக்டர் லாம் மெங் சோன் கூறினார்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தங்குவிடுதிகளை நடத்துவோருக்கும் ஆதரவு வழங்க இந்தப் பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறி
முகப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிடத்தைப் பொறுத்து, அருகில் இருக்கும் வட்டார மருத்துவ நிலையம் அல்லது தங்குவிடுதிகளில் உள்ள மருத்துவ நிலையத்தில் பதிவு செய்யப்படுவர்.
தங்கள் பராமரிப்பின்கீழ் இருக்கும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களை மருத்துவ நிலையங்கள் வைத்திருக்கும்.
ஒவ்வோர் ஊழியருக்கும் ஒரே ஒரு மருத்துவப் பதிவு இருப்பது உறுதி செய்யப்படும்.

