சிங்கப்பூரில் முக்கியமான நகர இடங்களில் கட்டப்படும் வீவக வீடுகள் பற்றிய தங்கள் கருத்துகளைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
அத்தகைய வீடுகள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மேலும் மானியம் கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
முதல் தடவை வீடு வாங்குவோருக்கும் தொடர்ந்து மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த விவரங்களைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று (ஜூலை 4) தெரிவித்தார்.
தேசிய இணையம் வழியிலான ஆய்வு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், குழு விவாதிப்புகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் சென்ற நவம்பர் முதல் 6,500 பேருக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துகள், யோசனைகளைத் தெரிவித்து வந்துள்ளனர்.
கட்டப்படும் வீவக வீடுகள் எல்லாரையும் உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும் என்பதைச் சாதிப்பது எப்படி என்பது பற்றி சிங்கப்பூரர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நகர மையம், பரந்த தெற்கு நீர்முனை போன்ற மிக முக்கிய இடங்களில் கட்டப்படும் புதிய அடுக்குமாடி வீடுகள், விலையில் கட்டுப்படியாகக் கூடியவையாக, எல்லாரையும் உள்ளடக்கக் கூடிய வையாக, சிங்கப்பூரர்களுக்கு எட்டக் கூடியவையாக இருப்பதற்கு வகைசெய்யும் கருத்துகளைத் திரட்டுவதற்காக அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான ‘ரீச்’ நடத்திய பொதுமக்கள் மெய்நிகர் ஈடுபாட்டு நிகழ்ச்சியில் இந்த விவரங்களை அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தகைய வீடுகளை வாங்கக் கூடிய நிலையில் சிங்கப்பூரர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த மேலும் கூடுதலாக மானியம் தேவை என்று பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருதுகிறார்கள்.
அதேவேளையில், இதில் சமத்துவம், நியாயம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது என்பதையும் அவர்கள் தெள்ளத்தெளிவாக உணர்த்தி உள்ளனர்.
அதேபோல, அந்தக் கூடுதல் மானியங்களைத் திரும்பப் பெறுவதற்கான சில வழிகளைக் காண வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
(இந்தச் செய்தியின் விரிவாக்கம் நாளை தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)