சிங்கப்பூரில் முக்கியமான நகர இடங்களில் கட்டப்படும் வீவக வீடுகள் பற்றிய தங்கள் கருத்துகளைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
அத்தகைய வீடுகள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மேலும் மானியம் கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
முதல் தடவை வீடு வாங்குவோருக்கும் தொடர்ந்து மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த விவரங்களைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.
தேசிய இணையம் வழியிலான ஆய்வு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், குழு விவாதிப்புகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் சென்ற நவம்பர் முதல் 6,500 பேருக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துகள், யோசனைகளைத் தெரிவித்து வந்துள்ளனர்.
கட்டப்படும் வீவக வீடுகள் எல்லாரையும் உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும் என்பதைச் சாதிப்பது எப்படி என்பது பற்றி சிங்கப்பூரர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நகர மையம், பரந்த தெற்கு நீர்முனை போன்ற மிக முக்கிய இடங்களில் கட்டப்படும் புதிய அடுக்குமாடி வீடுகள், விலையில் கட்டுப்படியாகக் கூடியவையாக, எல்லாரையும் உள்ளடக்கக் கூடிய வையாக, சிங்கப்பூரர்களுக்கு எட்டக் கூடியவையாக இருப்பதற்கு வகைசெய்யும் கருத்துகளைத் திரட்டுவதற்காக அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான 'ரீச்' நடத்திய பொதுமக்கள் மெய்நிகர் ஈடுபாட்டு நிகழ்ச்சியில் இந்த விவரங்களை அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தகைய வீடுகளை வாங்கக் கூடிய நிலையில் சிங்கப்பூரர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த மேலும் கூடுதலாக மானியம் தேவை என்று பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருதுகிறார்கள்.
அதேவேளையில், இதில் சமத்துவம், நியாயம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது என்பதையும் அவர்கள் தெள்ளத்தெளிவாக உணர்த்தி உள்ளனர்.
அதேபோல, அந்தக் கூடுதல் மானியங்களைத் திரும்பப் பெறுவதற்கான சில வழிகளைக் காண வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
எதிர்கால பொது வீடமைப்பிற்கான முன்மாதிரியை வகுப்பதில் அரசாங்கம் சமாளிக்க வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் நேற்று திரு லீ குறிப்பிட்டார். முக்கியமான இடங்களில் அமையும் வீடுகளை வாங்குவதற்கு தகுதி பெறக்கூடிய நிபந்தனையாக, இப்போதைய பிடிஓ வீடுகளுக்கான வருமான வரம்பு போதுமானதா என்ற பிரச்சினையும் இருக்கிறது.
அதோடு, வீவக புதிய வீடுகளை ஒதுக்கும் விதத்தைப் பற்றி ஆராய்வதும் பயனுள்ளதாக இருக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இப்போது குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
நீண்டகாலப்போக்கிலும் அதைத் தொடர்ந்து மறுவிற்பனைச் சந்தையிலும் அத்தகைய வீடுகள் கட்டுப்படியாகக் கூடியதாக தொடர்ந்து இருந்து வருமா என்பதை உறுதிப்படுத்துவது புதிய வீட்டு மாதிரிகளை வகுப்பதில் மிகவும் சிரமமான ஒரு சவால் என்றார் அமைச்சர். பொது வீடமைப்பு முன்மாதிரி என்பது வெறும் வீட்டுக் கொள்கை மட்டுமல்ல.
அது எதிர்கால சிங்கப்பூரர்களைப் பாதிக்கக்கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கும் பெரிய சமூகக் கொள்கையும் ஆகும் என்று அவர் கூறினார்.
அந்த வீடுகள் விற்கப்படும்போது அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் மானியங்களை மீட்பதற்கு படிப்படியான ஏற்பாட்டு முறை, ஐந்தாண்டுகளைவிட அதிகமான குறைந்தபட்ச குடியிருப்புக் கால வரம்பு முதலானவையும் நேற்று விவாதிக்கப்பட்டன.
அத்தகைய வீடுகள் பரவலான சிங்கப்பூரர்களுக்கு எட்டக்கூடியவையாக தொடர்ந்து இருந்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் மறுவிற்பனை வீடுகளை வாங்க தகுதிபெற புதிய நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் நேற்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மிக முக்கியமான இடங்களில் புதிய வீவக வீடுகளைக் கட்டுவதற்கான திட்டங்கள் பற்றி சென்ற நவம்பரில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.
அந்தப் பொது வீடமைப்பின் முன்மாதிரி, முக்கியமான இடங்களில் இடம்பெறும் எதிர்கால பொது வீடமைப்புக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக இருக்கும் என்று நேற்று திரு லீ வலியுறுத்திக் கூறினார்.
முக்கிய இடங்களில் கட்டப்படும் பிடிஓ வீடுகள்: பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருத்து பற்றி அமைச்சர் விளக்கம்

