இந்திய ஊழியர்கள் சிங்கப்பூர் வர அனுமதி

இந்திய ஊழியர்கள் சிங்கப்பூர் வர அனுமதி

2 mins read
f1abc27f-aca2-4d43-9420-5f67d2bcaf14
-

கட்டுமானம், கடல்துறை, செய்முறைத் தொழில்துறை ஆகிய துறைகளின் முன்னோட்டத்தின்கீழ் இம்மாதத்தில் இருந்து இந்திய ஊழியர்கள் 'சிறிய அளவில்' சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர். இம்முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், பாதுகாப்பாகவும் சீரான அளவிலும் வெளிநாட்டு ஊழியர்கள் வருவதற்கு அந்த முறை பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம், சிங்கப்பூர் கடல்துறை நிறுவனங்கள் சங்கம், செய்முறைத் தொழில்துறைச் சங்கம் ஆகியவை இன்று ஒரு கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன. அந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ் மலேசியாவில் இருந்து வந்த சில தொகுதி ஊழியர்கள் எவரையும் கொவிட்-19 தொற்றாததை அடுத்து இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளது. அந்த ஊழியர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நடப்பிலுள்ள சுகாதார நெறிமுறைகளுக்கும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கும் அவர்கள் உட்பட வேண்டும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர் வரத்து குறைந்ததால் அம்மூன்று துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பங்ளாதேஷ், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய இப்போதைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான நெருக்கடிகளைத் தணிக்கும்விதமாக, அதிகமான வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.

2019 இறுதியில் இருந்து, அந்த மூன்று துறைகளிலும் வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டிற்கும் மேல், அதாவது 60,000 குறைந்தது. அதனால் திட்டங்கள் தாமதமடைவதோடு ஊழியர்க்கான செலவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்தன. அத்துடன், வேலையிட விபத்து நிகழும் அபாயமும் ஊழியர் பற்றாக்குறையால் அதிகரிக்கக்கூடும் என்றும் அவை குறிப்பிட்டன.