மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 8,868 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே மலேசியாவில் பதிவாகியுள்ள இரண்டாவது ஆக அதிகமான பாதிப்பு.
இதற்கு முன்பு கடந்த மே மாதம் 29ஆம் தேதியன்று ஒரே நாளில் 9,020 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் 4,152 பேர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனாவால் தலைநகர் கோலாலம்பூரில் 1,133 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் கொவிட்-19
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 808,658ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கும் மலேசிய மாநிலமான ஜோகூரில் நேற்று மேலும் 336 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களை அடுத்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நேற்று அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அங்கு நேற்று மேலும் 897 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தாய்லாந்து எல்லை அருகில் இருக்கும் பெர்லிஸ் மாநிலத்தில் நேற்று புதிதாக ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
கொவிட்-19 சூழல் காரணமாக மலேசியாவில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முடக்கநிலை தொடர்ந்து
நீட்டிக்கப்படுவதால் மலேசியர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டது.
சிலர் பொருளாதார அடிப்படையில் அவதியுற்று வருகின்றனர்.
இதன் விளைவாக வெள்ளைக் கொடி அணுகுமுறையை இவர்கள் கையாண்டு வருகின்றனர்.
உதவி தேவைப்படும்போதெல்லாம் சன்னலுக்கு வெளியே வெள்ளைக் கொடியை அவர்கள் தொங்கவிடுகின்றனர்.
சன்னலுக்கு வெளியே தொங்கும் வெள்ளைக் கொடியைப் பார்ப்பவர்கள் உடனடியாக அந்தந்த கிராம சபையினரிடம் தெரிவிப்பர். பணம், உணவு போன்றவற்றைக் கொடுத்து இத்தகைய குழுக்கள் கொவிட்-19 நெருக்கடிநிலையால் நலிவுற்றோருக்கு உதவி செய்து வருகின்றன.

