கேடிவி மனமகிழ் மன்ற கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமம் பெருகிவரும் வேளையில், கிருமிப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி கொவிட்-19 அமைச்சுகள்நிலைப் பணிக்குழு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (ஜூலை 15) தெரிவித்துள்ளார்.
அது குறித்த விவரங்களை பணிக்குழு விரைவில் வெளியிடும் என்றார் அவர்.
கேடிவி மனமகிழ் மன்றங்களில் அண்மையில் ஏற்பட்ட கிருமித்தொற்று நிலவரம் பற்றி தாம் வருத்தமும் விரக்தியும் அடைந்துள்ளதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
“தனிநபர் பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நெருக்கடி நேரத்தில் இத்தகைய சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன. எந்தவொரு நபரும் தனித்தீவு அல்ல,” என்று அவர் பதிவிட்டார்.
கிருமித்தொற்று நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அதிகாரிகள் இடைவிடாது பணியாற்றி வருவதாக திரு வோங் சொன்னார்.
இந்நிலையில், மனமகிழ் மன்றங்களுக்குச் சென்று வந்தவர்கள் பரிசோதனை செய்துகொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.