முதியவர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கு மேலும் வசதியாக அதிகபட்சம் 10 நடமாடும் குழுக்கள் குடியிருப்புப் பேட்டைகளுக்குச் சென்று அப்பணியில் ஈடுபடவுள்ளன. சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தது.
இன்னமும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாத மூத்தோரைப் பாதுகாக்க அரசாங்கம் கூடுதல் முயற்சி எடுத்து வரும் வேளையில் இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
"மூத்தோர்தான் மிகுந்த அபாயத்தில் உள்ள பிரிவினர். கொவிட்-19 தொற்றினால் உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் அவர்கள் உள்ளனர் என்பதால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்," என்று அமைச்சு குறிப்பிட்டது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் அவர்களால் கிருமியை எதிர்த்துப் போராட முடியாது என்றது சுகாதார அமைச்சு.
இதுவரை, 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களில் பத்தில் ஏழு பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டு விட்டது.
முதியவர்கள் பலர் குடியிருக்கும் வட்டாரங்களில் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் சில நாட் களுக்கு அல்லது ஒரு வாரத்துக்குச் செல்லும். ஏற்கெனவே தடுப்பூசி நிலையங்களாகச் செயல்பட்டு வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக மன்றங்கள், புளோக்குகளின் கீழே உள்ள குடியிருப்பாளர் நிலையங்கள் போன்ற இடங்களில் நடமாடும் குழுக்கள் நிறுத்தப்படும்.
முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற வசதியாக சில வாரங்கள் கழித்து நடமாடும் குழுக்கள் அதே இடத்துக்குத் திரும்பும்.
முதல் நடமாடும் தடுப்பூசிக் குழு ஏற்கெனவே ஜூலை 7 முதல் 13ஆம் தேதி வரை ஆங்கர்வேல் சமூகமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. காலாங், வாம்போ சமூக மன்றங் களுக்குக் கடந்த 14ஆம் தேதி சென்ற தடுப்பூசிக் குழுக்கள் 21ஆம் தேதி வரை அங்கிருக்கும்.
அடுத்து சில வாரங்களில் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் சாங்கி சீமெய் சமூக மன்றம், பாய லேபார் கோவன் சமூக மன்றம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவிருக்கின்றன.

