நாளை மறுநாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தனியாக அல்லது இருவராகச் சேர்ந்து மட்டுமே உணவகத்தில் உண்ண முடியும். இந்த நடைமுறை நாளை மறுநாள் 19ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.
அதே வேளையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதிகபட்சம் ஐவர் அடங்கிய குழுவாகச் சேர்ந்து உண்ண முடியும்.
இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோர், கிருமித்தொற்றுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கப்படுவதில் இருந்தும் மேம்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருப்பர் என்பதும் அவர்கள்மூலம் மற்றவர்களைக் கிருமி தொற்றும் வாய்ப்பு குறைவு என்பதுமே இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சு விளக்கியது.
ஆயினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றால், ஐவர் குழுவில் சேர்ந்து உண்ணலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களும் குறைந்த அபாயம் உள்ளவர்களாகக் கருதப்படுவதால் அவர்களும் ஐவர்வரையிலான குழுக்களில் இடம்பெற்று உண்ண முடியும் என்றும் அமைச்சு கூறியிருக்கிறது.
12 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்டுள்ள ஒரே குடும்பத்தினரும் அதிகபட்சம் ஐவரைக் கொண்ட குழுவாகச் சேர்ந்து உண்ண முடியும். அந்தக் குழந்தைகள் நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.
சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் 12 வயதிற்குக் குறைவான குழந்தைகள் தடுப்பூசி போட தகுதிபெறவில்லை. அத்துடன், நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனை நடவடிக்கையின்போது குழந்தைகளிடம் எச்சில்/சளி மாதிரி சேகரிப்பதும் சவாலானது என்று அமைச்சு குறிப்பிட்டது.
தங்களது செயல்பாட்டு மாதிரி, வாடிக்கையாளர்களைப் பொறுத்தும் உண்ண வருவோர் தடுப்பூசி போட்டுவிட்டனரா இல்லையா என்பதைச் சோதிக்க முடிவதைப் பொறுத்தும், தடுப்பூசி போட்டுக்கொண்டோர், போடாதோர்க்கான குழு அளவுகளை அறிமுகம் செய்வதா இல்லையா என்பதை உணவு, பான நிலையங்களே முடிவுசெய்யலாம்.
ஆனால், உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் அதிகபட்சம் இருவர் மட்டுமே சேர்ந்து உண்ண முடியும்.
இந்த இடங்களில் பொதுவாக 'சேஃப்என்ட்ரி' நுழைவு அனுமதி முறை கட்டாயமாக்கப்படுவதில்லை என்பதே இதற்குக் காரணம். ஒரு மேசையில் சென்று அமருமுன் தனிநபர்களிடம் சென்று அவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டாரா இல்லையா என்பதைச் சோதிப்பதும் சவாலானது என்று அமைச்சு விளக்கியது. உணவு, பான நிலையங்களில் நேரடி நிகழ்ச்சிகள், பதிவு செய்யப்பட்ட இசை ஒலிபரப்பு, காணொளி அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றுக்கான தடை நீடிக்கிறது.
தடுப்பூசி போடாத 140,000 முதியோர்மீது கவனம்
இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, 70 வயதும் அதற்கும் மேற்பட்ட 140,000 மேற்பட்ட முதியோரைச் சென்றடைவதில் கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
இந்த எண்ணிக்கை, அவ்வயதுப் பிரிவினரில் 29% எனக் கூறப்பட்டது. இதையடுத்து, அப்பிரிவினரிடத்தில் தடுப்பூசி விகிதத்தை முடுக்கிவிடும்விதமாகச் சுகாதார அமைச்சு அவர்களைச் சென்றடைந்து வருகிறது.
எழுபது வயதுக்கு மேற்பட்டோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணங்க வைக்கும்படி பொது மருத்துவர்களுக்கும் அடிப்படைச் பராமரிப்பு வழங்குநர்களுக்கும் சுகாதார அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது.
"ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, மூத்த தலைமுறையினர் அலுவலகம், மக்கள் கழகம் ஆகியவற்றின் தொண்டூழியர்கள் தொடர்ந்து மூத்த குடிமக்களை நேரில் அணுகி, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் நன்மைகளைப் பகிர்ந்துகொள்வர்," என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் ஓங் கூறினார்.
தடுப்பூசி போட இணங்கும் முதியோரில் எவருக்கேனும் நடமாட்டப் பிரச்சினை இருந்தால் அவர்களை தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தொண்டூழியர்கள் உதவுவர்.
கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி, தடுப்பூசி தொடர்பில் மூத்த தலைமுறையினர் நாடு முழுவதும் 650,000க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களைச் சென்றடைந்ததாகவும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.