உள்ளூரில் இன்று (ஜூலை 17) புதிதாக 60 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் கேடிவி மனமகிழ் மன்றங்கள் மற்றும் இரவுநேர கேளிக்கைக் கூடங்கள் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
பெருகிவரும் கேடிவி தொற்றுக் குழுமத்தில் இதுவரை பாதிக்கப்போட்டோர் மொத்த எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் ஆகப்பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக இது விளங்குகிறது.
உள்ளூரில் கிருமி தொற்றிய அந்த 60 பேரில் 33 பேர் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.
இதர 22 பேரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். கண்காணிப்புப் பரிசோதனை மூலம் அவர்களுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
எஞ்சிய ஐவருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த எட்டுப் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த எண்மரில் ஒருவருக்கு சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தொற்று உறுதியானது. இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய எழுவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,981ஆக உள்ளது.