ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் இரு வாரங்களுக்கு மூடல்; மீன் கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவாகியிருப்பதை அடுத்து, எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஹோங் லிம் சந்தை, உணவு நிலையத்திற்கு கொரோனா பரவிவிட்டதால், அது மற்ற சந்தைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்கள் எங்களது பரிசோதனை நிலையங்களில் சோதனை செய்துகொள்ள தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தொடர்ந்து தங்களது உடல்நிலையைக் கண்காணித்துக்கொள்ள ஏதுவாக ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்," என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிவரை ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் பணியற்றிய அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.
அதே காலகட்டத்தில் அந்தத் துறைமுகத்திற்கு வந்து சென்ற அனைவர்க்கும் சிறப்புப் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதையடுத்து, கொரோனா பரவலை முறியடிக்கவும் முழுமையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக நேற்று முதல் இம்மாதம் 31ஆம் தேதிவரை ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டு இருக்கும்.
இது மீன் விநியோகிப்பாளர்களையும் சந்தைகளில் மீன்கடை வைத்துள்ளோரையும் பாதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் சற்றுக் கவலையடைந்து உள்ளனர். புதிய பணிப்புகளை (ஆர்டர்) எடுக்கப்போவதில்லை என்று மீன் விநியோகிப்பாளர்கள் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, வாடிக்கையாளர்கள் குவிந்ததால் சந்தையிலுள்ள மீன் கடைகளில் நேற்று விரைவாகவே மீன்கள் விற்றுத் தீர்ந்தன.
தேக்கா நிலையத்திலுள்ள ஈரச் சந்தையில் தம் தாயாருடன் சேர்ந்து '68 பிகே' மீன்கடையை நடத்திவரும் குமாரி கிஷா, 26, தமது கடைக்குப் பெரும்பாலும் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்கள் வருவதால் அடுத்த இரு வாரங்களுக்குத் தாம் கடையை மூட வேண்டியிருக்கும் என்று வருத்தத்துடன் கூறினார்.
தங்களுக்கு மீன் வழங்கும் நிறுவனம் வேறு இடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்வதால் பாதிப்பு இராது என்றார் 'தி பனானா லீஃப் அப்போலா' உணவகங்களின் உரிமையாளர் திரு சி.சங்கரநாதன்.
ஆனால், மீன் விநியோகம் பாதிக்கப்படும் என்று தங்களுக்கு மீன் வழங்கும் நிறுவனம் தெரிவித்ததாக காயத்ரி உணவகத்தின் இயக்குநர் திரு ச.மகேந்திரன் சொன்னார்.
அதேபோல, தங்களுக்கும் பாதிப்புண்டு என்றும் அதனால் பற்றாக்குறையைச் சமாளிக்க வேறு மீன் விநியோகிப்பாளர்களை அணுகப்போகிறோம் என்றும் முத்துஸ் கறி உணவகத்தின் இயக்குநர் திரு சீனிவாசன் அய்யாகண்ணு கூறினார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு வெளியே இயங்கும் 'நந்தனாஸ்' உணவகத்தின் உரிமையாளர் திரு சிவவடிவேல், "எங்களுக்கு மீன் வழங்கும் நிறுவனம் தற்காலிகமாக வேறு இடங்களில் இருந்து மீன்களைக் கொண்டுவர முயல்கிறது. அதனால், அவற்றைச் சற்று கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்," என்றார்.
சமூகத்தில் மேலும் 60 பேர் பாதிப்பு
சிங்கப்பூரில் புதிதாக
68 பேருக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதிப் படுத்தப்பட்டது. அவர்களில் 60 பேர் சமூகத்தில் உள்ளோர் என்றும் 29 பேர் கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு உடையவர்கள் என்றும் சுகாதார அமைச்சு கூறி இருக்கிறது. அவர்களில் 33 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். மற்ற 22 பேரைக் கிருமி தொற்றியது கண்காணிப்புப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்தோரில் எண்மருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 62,981ஆனது.

