அனைவரும் தடுப்பூசி போடவேண்டிய அவசியத்தை கேடிவி மற்றும் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் உருவாகியுள்ள கிருமித்தொற்று குழுமங்கள் நினைவுறுத்துவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
கிருமித்தொற்றுக்கு ஆளாகும் மூத்தோர் கடுமையாக நோய்வாய்ப்படலாம் என்பதால் இவர்களுக்கு இந்தச் செய்தி முக்கியம் என்று அவர் தமது பேஸ்புக் பதிவில் இன்று (ஜூலை 18ஆம் தேதி) தெரிவித்தார்.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, சோங் பூன் சந்தை மற்றும் உணவு நிலையத்தில் பணிபுரியும் அனைவருமே சோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
ஜூலை 3ஆம் தேதியன்று சந்தைக்குச் சென்றிருந்த வருகையாளர்கள் தங்களது உடல்நிலையைக் கண்காணிக்கும்படியும் உடல்நலம் சரியில்லை என்றால் உடனே மருத்துவரைக் காணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

