ரிவர் வேலி ஹை பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவர் பள்ளியிலேயே கொல்லப்பட்டதாகத் தகவல் இன்று வெளிவந்துள்ளது.
பூன் லே வட்டாரத்திலுள்ள அந்தப் பள்ளியில் குற்றச்சம்பவ விசாரணை வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் சுமார் நான்கு போலிஸ் வாகனங்கள் பள்ளி வளாகத்தில் காணப்பட்டன.
முதலாம் ஆண்டில் பயிலும் தம் மகளிடமிருந்து குறுஞ்செய்தி பெற்றதும் தாம் பள்ளிக்கு விரைந்ததாகத் திரு ஹுவாங் கூறினார். பள்ளியில் எவரோ கோடாரியுடன் இருந்ததாக தம் மகள் அனுப்பியதாக அவர் தெரிவித்தார். பள்ளியில் மாணவர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மணிக்கு போலிஸ் வாகனங்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றி காணப்பட்டன. பள்ளியின் பின்வாசல் மூடப்பட்டது. ஆயினும், பள்ளியைவிட்டு வெளியேறவேண்டிய மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
எஞ்சியோர் பள்ளியின் மண்டபத்துக்குச் செல்லக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள் அங்கு மாணவர்களிடம் பேசினர்.
மூன்று மணிக்குப் பிறகு மற்ற மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிக்கு வெளியே பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் காத்திருந்தனர். சுகாதார அறிவியல் ஆணையத்தின் (எச்எஸ்ஏ) வேன் ஒன்று, புலனாய்வு அதிகாரிகளுடன் பிற்பகல் 3.30 மணிக்கு பள்ளியை அடைந்தனர்.
மேல் விவரங்கள் பிறகு வெளியிடப்படும்..

