சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் நிலவரப்படி சமூகத்தில் புதிதாக 163 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானார்கள். அவர்களில் 106 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகம், சந்தைகள், உணவங்காடி நிலையங்களை உள்ளடக்கிய தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
இவர்களையும் சேர்த்து ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 169 ஆகக் கூடியுள்ளது.
புதிதாக சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 19 பேர் கேடிவி தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
இந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 192 ஆக இருக்கிறது.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 66 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள்.
அவர்கள் முன்பே தனித்து வைக்கப்பட்டவர்கள். இதர 71 பேருக்கு தொற்று இருந்தது, தடமறிதலின் வழியாகத் தெரியவந்தது. 26 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 70 வயதைக் கடந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒரு முதியவரும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேருக்கும் கிருமித்தொற்று இருந்தது. அவர்கள் இங்கு வந்தபோது தனிமைப்படுத்தப்பட்டனர்.
தரையிறங்கிய நேரத்தில் நால்வருக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. தனிமையில் இருந்தபோது இதர ஐவருக்குத் தொற்று ஏற்பட்டது.
சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63,245 ஆக இருக்கிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் இப்போது ஆகப் பெரிதாக உருவெடுத்துள்ள இரண்டு தொற்றுக் குழுமங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார். இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டான் டோக் செங் மருத்துவ மனை மற்றும் சாங்கி விமானநிலையம் ஆகிய குழுமங்களில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வகை டெல்டா கிருமி தொற்றி இருந்தது.
அந்த உருமாறிய கிருமிக்கும் இப்போதைய இரண்டு குழுமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கிருமிக்கும் இடையில் மரபணு ரீதியில் வேறுபாடு காணப்படுகிறது என்று திரு ஓங் ஃபேஸ்புக்கில் நேற்று தெரி வித்தார்.
ஆனால் இந்தோனீசியாவில் இருந்து வந்தவர்களிடம் காணப்பட்ட கிருமியை அந்த இரண்டு ஆகப் பெரிய குழுமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கிருமி ஒத்து இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அவை மூலம் திட்டவட்டமான முடிவுகள் தெரியவரும்போது அவற்றை பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு தெரிவிக்கும்.
இந்த நிலவரங்கள் ஒன்றைத் தெள்ளத்தெளிவாக உறுதிபட தெரிவிப்பதாகக் கூறிய அமைச்சர், இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படும் போது அதனால் எப்போதுமே நமக்கு ஆபத்து ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமையன்று 88 பேர் சமூகத்தொற்றுக்கு புதிதாக ஆளானார்கள்.
இந்த ஆண்டில் இதுவரை ஒரு நாளில் அந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை என்பதை திரு ஓங் சுட்டிக்காட்டி இருந்தார்.
''டெல்டா உருமாறிய கிருமி வேகமாக பரவும் என்பதையே அது காட்டுகிறது.
''கேடிவி, ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழுமங்களின் ஒட்டுமொத்த விளைவாகவே அந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது,'' என்று அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.