ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவரை போலிஸ் கைது செய்து உள்ளது. அவர் வேறு ஒரு மாண வரைக் கொலை செய்து இருப்ப தாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆதாரமாக ஒரு கோடரியை போலிஸ் அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பள்ளிக்கூடத்தில் நேற்று நிகழ்ந்ததாக போலிஸ் கூறியது.
அந்தப் பள்ளியில் உயர்நிலை 1ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர் முற்பகல் சுமார் 11.40 மணிக்குப் பள்ளிக்கூடக் கழிவறையில் உடலில் பல காயங்களுடன் விழுந்து கிடக்கக் காணப்பட்டார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் அந்த மாணவர் இறந்துவிட்டதாக அதே இடத்தில் அறிவித்தனர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் என்பது முதற்கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்து இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிய புலன்விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
கைதாகி இருக்கும் மாணவரின் மனநலனை மதிப்பிடுவதற்காக அவரை விசாரணைக் காவலில் வைக்குமாறு கேட்கும் எண்ணத்துடன் இன்று அந்த மாணவர் மீது கொலை குற்றம் சுமத்தப்படும்.
போலிஸ் முழுமையான புலன்விசாரணை நடத்தும். எல்லா விவரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று போலிஸ் கூறியது.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போவதால் இதுபற்றி ஊகச் செய்திகளை வெளியிட்டு பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் ஒதுங்கி இருக்கும்படி பொதுமக்களை போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கூடுமானவரை எல்லா ஆதரவையும் தமது அமைச்சு அளித்து வருவதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தெரிவித்தார். மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே மிக முக்கியமானது என்பதை நேற்று ஃபேஸ்புக் மூலம் அமைச்சர் உறுதிபடக் கூறினார்.
ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பற்றிய செய்தி கேட்டு நாம் அனைவருமே திடுக்கிட்டுப் போனதாக அமைச்சர் கூறினார்.
புலன்விசாரணையில் சிங்கப்பூர் போலிசுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் பெற்றோர்கள், மாணவர்களுடன் செயல்பட்டு பள்ளிக்கூடங்களைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க தமது அமைச்சு உறுதிபூண்டு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.