சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 182 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் 135 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுக கிருமித்தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து இந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 314க்கு உயர்ந்துள்ளது. அத்துடன் கேடிவி குழுமத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் 12 பேர். இந்தக் குழுமத்தில் 205 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
திங்கட்கிழமையன்று பதிவாகியுள்ள 163 சம்பவங்களுக்கு அடுத்து இன்றைய எண்ணிக்கை ஆக அதிகம். உள்ளூரில் பரவிய 182 சம்பவங்களில் 81, முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவை.
மேலும், வெளிநாடுகளிலிருந்து கிறுமித்தொற்றுடன் வந்த 13 பேர், சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 63,427 ஆக உள்ளது. தற்போது 28 சந்தைகளிலும் உணவு நிலையங்களிலும் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மேல் விவரங்களை சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடும்.