உள்ளூரில் இன்று (ஜூலை 21) புதிதாக 179 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 130 பேர், பெருகிவரும் ஜூரோங் மீன்பிடித் துறைமுகம், சந்தைகள், உணவு நிலையங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 451ஆக கூடியுள்ளது.
கேடிவி தொற்றுக் குழுமத்துடன் புதிதாக எட்டுப் பேருக்கு தொடர்பு இருக்கிறது. அந்தக் குழுமத்தில் இதுவரை மொத்தம் 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரில் நேற்று (ஜூலை 20) 182 பேருக்குத் தொற்று உறுதியாகி இருந்தது.
இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 179 பேரில் 80 பேர் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.
கண்காணிப்புப் பரிசோதனை மூலம் வேறு 69 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள்.
எஞ்சிய 30 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது பற்றி தெரியவில்லை.
கிருமி தொற்றியவர்களில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் நால்வர் அடங்குவர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்குக் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் இடர் உள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது அந்த இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63,608ஆக உள்ளது.