தொழில்துறைகள், ஊழியர்களுக்கு ஆதரவு
கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொழில் நிறுவனங்களிடத்திலும் ஊழியர்களிடத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைத் தணிக்கும்விதமாக $1.1 பில்லியன் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு இம்மாதம் 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 18ஆம் தேதிவரை வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் கூடுதல் உதவி கிடைக்கும்.
உணவு, பானம், உடற்பயிற்சிக்கூடங்கள், மேடைக்கலை நிறுவனங்கள் உட்பட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 60% நிதியுதவி கிடைக்கும்.
கட்டுப்பாடுகளால் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனை, தனிநபர் பராமரிப்பு சேவைகள், சுற்றுப்பயணம், உரிமம் பெற்ற ஹோட்டல்கள், சொகுசுக்கப்பல், வட்டாரப் பயணப்படகு நடத்துநர்கள், பயண முகவர்கள், அரும்பொருளகங்கள், கலைக்கூடங்கள், திரையரங்கு நடத்துநர்கள், மற்ற குடும்பக் கேளிக்கை மையங்கள் போன்ற துறைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 40% நிதியுதவி கிட்டும்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை இந்தத் துறைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 10% நிதியுதவி வழங்கப்படும்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான வணிகக் கட்டடங்களின் வாடகைதாரர்களுக்கு வாடகை ஆதரவுத் திட்டத்தின்கீழ் கூடுதலாக நான்கு வார காலத்திற்கு வாடகைத் தள்ளுபடி வழங்கப்படும்.
தனியார் வணிகக் கட்டடங்களில் தகுதியுள்ள வாடகைதாரர்களுக்கு இருவார காலத்திற்கான வாடகை தள்ளுபடி செய்யப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, இம்மாதம் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதிவரைக்கும் கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியை அரசாங்கம் மேம்படுத்தும்.
இப்போதைக்கு, தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு ஜூலையில் இருந்து 60 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு காருக்குப் பத்து வெள்ளியும் அடுத்த 30 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு காருக்கு ஐந்து வெள்ளியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மைய மேம்பாட்டின்படி, ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 31 வரை, தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு காருக்குப் பத்து வெள்ளியும் செப்டம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு ஒரு காருக்கு ஐந்து வெள்ளியும் கூடுதலாக வழங்கப்படும்.
புதிய சந்தை, உணவங்காடி நிலைய நிவாரண நிதியின்கீழ், தேசிய சுற்றுப்புற வாரியத்தால் அல்லது வாரியம் நியமித்த நடத்துநர்களால் நடத்தப்படும் நிலையங்களில் உள்ள கடைக்காரர்களுக்கு ஒருமுறை மட்டும் $500 வழங்கப்படும்.
கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களுக்கு உதவும்பொருட்டு, ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை தற்காலிக கொவிட்-19 மீட்சி மானியம் வழங்கப்படும். இதன்படி, விருப்பமின்றி ஊதியமில்லா விடுப்பில் இருப்போர்க்கு $700 வரையும் குறைந்தது ஒரு மாதத்திற்கு, குறைந்தது பாதி வருமானத்தை இழந்தோர்க்கு $500 வரையும் வழங்கப்படும்.
உணவு விநியோக ஊக்குவிப்புத் திட்டம் மீண்டும் அறிமுகம்
கடும் கட்டுப்பாடுகளால் உணவு, பானத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவு விநியோக ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டத்தை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளது. இம்மாதம் 22ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை உணவு விநியோகத் தளங்கள் மற்றும் மூன்றாம் நபர் தளவாடப் பங்காளிகள் மூலம் மேற்கொள்ளப்படும் உணவு விநியோகத்திற்கு ஆகும் செலவைச் சமாளிக்க இத்திட்டம் கைகொடுக்கும்.
உணவு விநியோகத் தளங்களைப் பயன்படுத்துவோர்க்கு, தரகுக் கட்டணத்தில் ஐந்து விழுக்காட்டுப் புள்ளியை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வழங்கும். அதேபோல, மூன்றாம் நபர் தளவாடப் பங்காளிகள் மூலம் உணவு விநியோகம் செய்வதற்கு ஆகும் செலவில் 20% நிதியுதவி வழங்கப்படும்.
மின்வணிக ஊக்குவிப்புத் தொகுப்பை நீட்டிப்பதன்மூலம் உள்ளூர் மின்வணிகத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள உள்ளூர் சில்லறை விற்பனைதாரர்களுக்கு மானிய ஆதரவு வழங்கப்படும். லஸாடா, கியூ10, ஷாப்பி போன்ற தளங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டணங்களுக்கான தகுதிச் செலவுகளுக்கு சில்லறை விற்பனைதாரர்களுக்கு ஒருமுறை மட்டும் 80% ஆதரவு வழங்கப்படும். அவ்வகையில், அதிகபட்சமாக $8,000 நிதியுதவி கிடைக்கும்.
கூடுதல் விவரங்களுக்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் இணையத்தளத்தை நாடலாம்.