கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறும் இதில் கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும் பிரதமர் லீ சியன் லூங் மூத்தோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 24) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், சிங்கப்பூரில் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட ஏறத்தாழ 200,000 மூத்தோரிடம் இதனை வலியுறுத்தினார்.
மூத்தோர் வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே செல்லாவிட்டாலும் அவர்களை கொவிட்-19 தொற்றும் அபாயம் இருப்பதாக பிரதமர் லீ எச்சரித்தார். காரணம், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிருமி அவர்களைத் தொற்றக்கூடும்.
குறிப்பாக, கொவிட்-19 நோய் மூத்தோருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் உடைய மூத்தோருக்கு கொவிட்-19 மேலும் ஆபத்தானது என்றும் பிரதமர் லீ எச்சரித்தார்.
தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து அவர் வெளியிட்ட காணொளிப் பதிவில், “தடுப்பூசி உங்களை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும். சிலருக்குப் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். ஆனால், இவற்றில் பெரும்பாலும் கடுமையானவை அல்ல.
“ஓரிரு நாட்கள் உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் சரியாகிவிடுவீர்கள். கொவிட்-19க்கு எதிராக உங்களது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,” என்று விவரித்தார்.