சிங்கப்பூரிலுள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடித்த டேவிட் ஜேம்ஸ் என்ற கனடியருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும், அவருக்கு பிரம்படி தண்டனை விலக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கல் நேற்று அளிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. பிரிட்டனில் பிடிப்பட்ட அந்த ஆடவரை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்ப ஒப்புக்கொண்டபோது அவருக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட கூடாது என்ற நிபந்தனையை பிரிட்டன் விதித்தது. பிரம்படி தண்டனைக்கு பதிலாக வேறு எந்த தண்டனையும் கூடுதலாக விதிக்கப்படமாட்டது என்று சிங்கப்பூர் உறுதி அளித்தது.
சிங்கப்பூரின் அரசியல் சாசனச் சட்டத்தின் 22பி(1) அளித்துள்ள அதிகாரத்தின்படி இந்நாட்டின் அதிபர், அமைச்சரவையின் ஆலோசனையின்படி அந்தத் தண்டனையை ரத்து செய்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்தது.
31 வயது டேவின் ஜேம்ஸ் ரோச், ஸ்டென்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டதை அடுத்து சிங்கப்பூரைவிட்டு 30,000 வெள்ளி ரொக்கத்துடன் ஓட்டம் பிடித்தார். ஜூலை 7ஆம் தேதியன்று அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
கொள்ளைச்சம்பவம் நடந்த அந்நாளில் ரோச் சிங்கப்பூரிலிருந்து தாய்லந்திற்கு ஓடினார். 2018 ஜனவரி 11ஆம் தேதி ரோச், தாய்லாந்திலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்டார். பிரிட்ஷ் அதிகாரிகளின் உதவியுடன் சிங்கப்பூர் அவரை இங்கு வரவழைத்து கைது செய்தது.