அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்கும் புளோக் 456ல் வசிப்போருக்கு நேற்று கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.
அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிரதமர் லீ சியன் லூங், நேற்று பிற்பகல் சுமார் 12.20 மணிக்கு பரிசோதனை நிலையத்திற்குச் சென்று குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்கள், பரிசோதனை ஊழியர்கள் ஆகியோருடன் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்.
அந்த புளோக்கில் வசிக்கும் நான்கு குடும்பத்தினரிடையே எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அதே புளோக்கில் வேறு யாருக்காவது தொற்று இருக்குமா என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சு கட்டாயப் பரிசோதனையைத் தொடங்கியது.
தொற்று ஏற்பட்ட அந்த எட்டு பேரில் பெரும்பாலானவர்கள் ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருந்தது.
புளோக் 456ல் உள்ள கடை உரிமையாளர்கள், ஊழியர்களையும் அமைச்சு பரிசோதித்து வருகிறது. சென்ற செவ்வாய்க்கிழமை முதல் பரிசோதனை மூலம் தொற்று இல்லை என்று தெரிய வந்திருப்போர், விரும்பினால் மீண்டும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
சமூகத்தில் அறிகுறி தெரியாமல் யாருக்காவது தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் அமைச்சு முயன்று வருகிறது. புளோக் 456ல் குடியிருக்கும் மக்களுடன் ஜூலை 9ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால் அல்லது அந்த புளோக்குக்கு யாராவது சென்று வந்திருந்தால், விருப்ப அடிப்படையில் அவர்கள் பரிசோதனை செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சு செய்துள்ளது.
இந்தப் பரிசோதனை, நாளை வரை அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்கும் புளோக் 460Aல் நடக்கும்.
விரைவு பரிசோதனை
நிலையங்கள் அதிகரிப்பு
இதற்கிடையே, கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர முயற்சியாக சிங்கப்பூரில் இதுவரை 16 விரைவு பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் மேலும் நான்கு நிலையங்கள் கூடிய விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பரிசோதனை நிலையமும் ஒரு நாளில் 400 முதல் 1,000 பேருக்கு கொரோனா கிருமிக்கு எதிரான பரிசோதனை செய்யும் ஆற்றல் கொண்டது. இதன் அடிப்படையில் இந்நிலையங்களில் குறைந்தது 6,400 பரிசோதனைகளாவது ஒரு நாளில் செய்து முடிக்கப்படலாம்.
அங் மோ கியோ, பீஷான், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், பாசிர் ரிஸ் ஆகியவற்றுடன் மேலும் பல வட்டாரங்களில் இந்த நிலையங்கள் அமைந்துள்ளன. ஜூன் 21க்கும் சென்ற புதன்கிழமைக்கும் இடைப்பட்ட நாட்களில் சுமார் 13,900 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பரிசோதனை பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு இடவசதி உள்ளதா என்பதை ஆராய்ந்து பரிசோதனை நிலையத்தை அமைக்கும் இடம் தேர்வாவதாக விளக்கப்பட்டது.