உள்ளூரில் மேலும் 117 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 46 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழுமத்துடன் தொடர்பு உடையவர்கள். இத்துடன் அக்குழுமத்தில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 787ஆக உயர்ந்துள்ளது. கேடிவி குழுமத்தில் மேலும் ஐவர் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட, அக்குழுமத்தில் இதுவரை மொத்தம் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 43 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். கண்காணிப்புப் பரிசோதனைகள் மூலம் மேலும் 36 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்பு கண்டறியப்படாத 38 பேரும் புதிய எண்ணிக்கையில் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவர்.
வெளிநாட்டிலிருந்து வந்த எண்மருக்கும் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 64,179ஐ எட்டிவிட்டது.

