மலேசியாவில் நேற்று மூன்றாவது நாளாக புதிய உச்சத்தில் 17,045 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. கொள்ளைநோய் நாட்டை ஆட்டிப்படைக்கத் தொடங்கியதில் இருந்து நேற்று பதிவான சம்பவங்களுடன் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது.
இதற்கு முன் வெள்ளிக்கிழமை அன்றும் நேற்று முன்தினமும் நாள் ஒன்றுக்கு 15,000க்கும் மேற்பட்ட கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மலேசியாவில் பதிவாகி வந்தன. நேற்றைய சம்பவங்களுடன் மலேசியாவின் மொத்த கிருமி பாதிப்பு எண்ணிக்கை 1.013 மில்லியனை எட்டிவிட்டது.
தலைநகரான கோலாலம்பூர், மலேசியாவிலேயே ஆக அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமான சிலாங்கூர் ஆகியவை உட்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலேயே தொடர்ந்து கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பெருவாரியாக உள்ளன. நேற்று இப்பகுதியில் மட்டும் பதிவான கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 10,500க்கும் மேலாகும்.
கெடா மாநிலத்திலும் அதன் புதிய உச்சமாக நேற்று 1,216 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இவ்வாண்டு மே மாதம் தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடுகள் மூன்றாவது மாதமாக நடப்பில் இருந்தும் மலேசியாவின் கொவிட்-19 எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வது கவலைக்குரியது.
இதற்கிடையே, ஜூன் 1 முதல் மலேசியாவில் கடுமையான முடக்கநிலை அமலுக்கு வந்தும் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா கிருமி போன்றவை, தொற்றைப் பரப்பும் சாத்தியத்தை மேலும் அதிகமாக்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
கிளந்தான் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல் டெல்டா உருமாறிய கிருமித்தொற்றுச் சம்பவம் கண்டறியப்பட்டது. பாசிர் புத்தே பகுதியைச் சேர்ந்த மாது ஒருவரிடம் டெல்டா கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக 'தி ஸ்டார்' செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அந்த மாது, ஏற்கெனவே கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்தமாநிலத்தின் வீடமைப்பு, சுகாதார பணிக்குழுத் தலைவர் இஸானி ஹுசின் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.
"சமூகத்தில் இந்த டெல்டா உருமாறிய கிருமித்தொற்று ஊடுருவிவிட்டது என நான் நினைக்கிறேன். இது மிகவும் கவலை தரும் ஒன்று," என்றார் அவர்.
இதற்கிடையே மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதமும் துரிதமடையத் தொடங்கிஉள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தகுதியுடைய பெரியவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர், நேற்று முன்தின நிலவரப்படி தங்களின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்நிலையில், கொவிட்-19க்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோர், ஒரு சில சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் முகைதீன் யாசின் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். விளையாட்டு, சமூக நடவடிக்கைகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.