சிங்கப்பூர் அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மறுஆய்வு செய்யும் என்றும் கிருமித்தொற்றுக் குழுமங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருந்தால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
எனினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அவை பொருந்தும் என்று நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 26) அவர் கூறினார்.
கிருமிப் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நன்கு பாதுகாப்பு பெற்றிருப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
“நூறு பேருக்கு மேல் பங்குபெறும் பெரிய நிகழ்வு அல்லது சமய வழிபாட்டில் நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால் நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
“உணவகத்தில் அமர்ந்து உணவருந்தவோ உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்யவோ விரும்பினால் நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,” என்று திரு வோங் கூறினார்.
செப்டம்பர் மாதவாக்கில் சிங்கப்பூர் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த இயலும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது மக்கள்தொகையில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்போர் பதினான்கு நாள்களுக்கு ஹோட்டலில் தங்கியிருக்கும் உத்தரவை நிறைவேற்ற தேவையில்லாமல், கொவிட்-19 நிலவரம் கட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்ப அனுமதிப்பது உள்ளிட்டவை அத்தகைய தளர்வுகளில் அடங்கும்.