மே மாதம் முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இருமுறை கடுமையாக்கப்பட்டதால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கும் ஊழியர்
களுக்கும் உதவ $2 பில்லியனுக்கு மேல் ஒதுக்கப்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆக அண்மைய இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலைக் கட்டுப்பாடுகள் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சியைச் சீர்குலைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சவால்களுக்கு மத்தியில் சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு 4 முதல் 6 விழுக்காடு வரை வளர்வதற்கான பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் அதேநேரம் உணவு, பானத் துறை, சில்லறை வர்த்தகம் போன்ற பயனீட்டாளர்களின் நேரடித் தொடர்புடைய துறைகள் தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் துணைநிலை ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன்னர் இத்தகவல்களை அவர் விவரித்தார்.
புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் பாதிப்புகளைச் சரிக் கட்டும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை உதவித் தொகுப்பை நிதி அமைச்சு அறிவித்தது.
தகுதியுள்ள உணவங்காடிக் கடைகளுக்கும் வர்த்தகங்களுக்கும் வாடகை நிவாரணம், வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் மேம்
படுத்தப்பட்ட சம்பள ஆதரவு உள்ளிட்டவை அந்தத் தொகுப்பில் இடம்பெற்று இருந்தன.
அவற்றுக்கு $1.1 பில்லியனுக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுஒதுக்கீடு மூலம் இதற்கு நிதியளிக்கப்படும் என்று திரு வோங் தெரிவித்துள்ளார்.
இத்தொகுப்பின் பெருந்தொகையான $0.9 பில்லியன் கொள்ளைநோய் நிலவரத்தால் ஏற்பட்ட தாமதம் காரணமாக பயன்படுத்தப்படாத நடைமுறை மற்றும் மேம்பாட்டுச் செலவுகளிலிருந்து பெறப்படும். பள்ளி நடவடிக்கைகளுக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒருமுறை ஒதுக்கப்படும் இந்தத் தொகை அவை ஒத்திப்போடப்பட்டதாலும் அல்லது ரத்து செய்யப்பட்டதாலும் இத்தொகை பயன்பாட்டுக்கு வரவில்லை என்று விளக்கினார் திரு வோங்.
"கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது நாம் வலுவான நிலையில் இருப்பதாலும் பொருளியல் நடவடிக்கைகள் தொடருவதாலும் நமது கடந்தகால நிதிக் கையிருப்பில் இருந்து தொகையை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இதற்கு முன்னர் கூறியிருந்தேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
"உதவித்தொகுப்புக்குத் தேவைப்படும் நிதி மறுஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்படும் என்பதால் 2021 நிதி ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதி நிலவரத்தில் எந்த மாற்றமும் இராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த பற்றாக்குறை $11 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 விழுக்காடு என்பது நீடிக்கும்.
"பாதிக்கப்படும் துறைகளைச் சேர்ந்த வர்த்தகங்கள் மாறி மாறி அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக, அண்மையில் கொவிட்-19 நிலவரத்தில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றத்தால் அவை பெரிதும் ஏமாற்றமடைந்து உள்ளன.
"இருப்பினும் வர்த்தகத் தலை வர்களைச் சந்தித்துப் பேசியபோது கட்டுப்பாடுகளின் அவசியத்தை உணர்ந்திருப்பதாக அவர்கள் கூறி னர்," என்றார் நிதி அமைச்சர்.

