சிங்கப்பூரில் நேற்று உள்ளூரில் 130 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 27 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். இவர்களையும் சேர்த்து அந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டு இருப்போரின் எண்ணிக்கை நேற்று நண்பகல் நிலவரப்படி 929 ஆகக் கூடியது.
புதிதாக கிருமி தொற்றியோரில் இருவருக்கு கேடிவி தொற்றுக் குழுமத்துடன் தொடர்புண்டு. இவர்களையும் சேர்த்து இந்தக் குழுமத்தில் மொத்தம் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக கிருமி தொற்றிய 130 பேரில் 61 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள்.
அவர்கள் ஏற்கெனவே தனித்து வைக்கப்பட்டவர்கள். தடமறிதல் மூலம் 21 பேருக்கு கிருமி தொற்றி இருந்தது தெரியவந்தது.
எஞ்சிய 48 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
புதிதாக நேற்று கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் 136. அவர்களில் ஆறு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரி வித்தது.

