3வது அலைக்கு மூல காரணமாகலாம் என்ற அச்சம்; எதிர்ப்பு சக்தி உள்ள மக்கள் 44%தான்
இந்தியாவில் முதன்முதலாக 2020ல் கொவிட்-19 கிருமித்தொற்று கேரள மாநிலத்தில்தான் தலைகாட்டியது.
அந்த மாநிலத்தில் அதுமுதல் கொரோனா கிருமி முற்றிலும் ஒடுங்குவதற்கான அறிகுறிகள் இன்றுவரை தெரியவில்லை.
நாட்டில் மூன்றாவது அலைக்கான மையமாக கேரளா உருவெடுக்கக்கூடும் என்று அச்சப்படும் அளவுக்கு அந்த மாநிலத்தில் தொற்று தொடர்ந்து இப்போது அதிகமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் வார இறுதி நாட்களில் முழுமுடக்கம் நடப்புக்கு வருகிறது. இதன்படி, நாளையும் மற்றும் ஆகஸ்டு 1ஆம் தேதியும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, அந்த மாநிலத்திற்கு உதவுவதற்காக மத்திய அரசாங்கம் ஆறு பேர் அடங்கிய ஒரு குழுவை உடனே அனுப்பி உள்ளதாக இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார்.
இந்தியாவில் அன்றாடம் புதிதாக கிருமி தொற்றியோரில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்குச் சராசரியாக கேரளாவில் ஏறத்தாழ 17,443 பேருக்குப் பாதிப்பு ஏற்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,056 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 131 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேர் புதிதாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளானார்கள்.
இவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 50 விழுக்காட்டுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் இரண்டாவது அலை ஓய்ந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் நிலவரம் வேறு பட்டு உள்ளது.
அந்த மாநிலத்தில் 44.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொவிட்-19 கிருமியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் உடலில் இருப்பதாக ஜூன் மாதம் 14ஆம் தேதிக்கும் ஜூலை 6ஆம் தேதிக்கும் இடையில் நடத்தப்பட்ட பரிசோதனை ஆய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய அளவில் இந்த ஆற்றலின் விகிதம் 67.7 விழுக்காடு. கேரளாவைவிட கிருமி எதிர்ப்பு ஆற்றல் விகிதம் குறைவாக உள்ள மாநிலம் வேறு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் தொற்று காரணமாக மேலும் பலர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இருந்தாலும் சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து வருகிறார். இரண்டாவது அலை இந்த மாநிலத்தில் மெதுவாகத்தான் தொடங்கியது என்று குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் முதல் அலை ஏற்பட்டு நாடு முழுவதும் கிருமித்தொற்று குறைந்து வந்தபோது தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பிறகு தொற்று மிகவும் குறைந்தது.
அதுபோலவே இப்போதும் வரும் நாட் களில் தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் என்று கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
இந்தியாவில் கிருமி பாதிப்புக்கு ஆளான மக்களின் மொத்த எண்ணிக்கை 3.15 கோடியாகியது. மரண எண்ணிக்கை 4.22 லட்சம் என்று நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

