சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட நீர், கழிவுச் சுத்திகரிப்பு நிலையமான துவாஸ் நெக்சஸ் நிலையத்திற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்துவைக்கின்றன.
நிலையம், அமைந்திருக்கும் நிலத்தை நன்கு உபயோகித்து எரிசக்தி மற்றும் வளங்களை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தும். அடுத்த கட்டமாக ஒரு நாளைக்கு 400 டன் அளவு உணவுக் கழிவைச் சுத்தம் செய்யக்கூடிய ஆலை, 800 டன் அளவு கழிவை எரிக்கக்கூடிய ஆலை ஆகியவை அமைக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
ஒருங்கிணைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் முதற்கட்டக் கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கழிவற்ற பொருளியலை வளர்க்கும் இலக்கை சிங்கப்பூர் கொண்டுள்ளது. அதற்கு இத்தகைய வசதிகள் முக்கியப் பங்கு வகிக்கும். ‘யுஇஎஸ் ஹோல்டிங்ஸ்’, ‘சைனா ஹார்பர்’ பொருளியல் நிறுவனம் ஆகிய இரண்டுக்கும் நிலையத்தைக் கட்டுவதற்கான குத்தகை வழங்கப்பட்டது. குத்தகையின் மதிப்பு 428 மில்லியன் வெள்ளி.
இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து நிலையத்தைக் கட்டும். துவாஸ் நெக்சசில் இரண்டு மாபெரும் ஆலைகள் இடம்பெறும். அவற்றில் ஒன்றான நீர் சுத்திகரிப்பு ஆலை பியுபி எனப்படும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கீழ் வரும். மற்றொன்று ஒருங்கிணைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலை. அதை தேசியச் சுற்றுப்புற அமைப்பு நிர்வகிக்கும்.