சிங்கப்பூரில் நேற்று புதிதாக 131 பேருக்கு கொவிட்-19 சமூகத்தொற்று உறுதியானது. அவர்களில் 28 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்தக் குழுமத்தில் மொத்தம் 997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நேற்று சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் ஒருவர் கேடிவி தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர். இந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249 ஆகக் கூடி இருக்கிறது.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 64 பேர் முந்தைய கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
தடமறிதல் மூலம் 15 பேருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய 52 பேருக்கும் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் ஒருவர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர். அவர் முதலாவது தடுப்பூசியை மட்டும் போட்டுக் கொண்டவர்.
வெளிநாட்டில் இருந்து வந்த எட்டு பேருக்கும் நேற்று தொற்று இருந்தது தெரியவந்தது. சிங்கப்பூருக்கு வந்தபோது அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் நேற்றைய பிற்பகல் நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64,861 ஆக இருந்தது.

