கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து கொவிட்-19 விதிமுறைகளை மீறிய ஏறத்தாழ 50 இரவு விடுதிகள் மீண்டும் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு, பான கடைகளாகச் செயல்படத் தொடங்கிய மற்ற விடுதிகள் பல்வேறு பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று நிபந்தனையுடன் கூடிய அனு
மதியைப் பெற்றால்தான் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேடிவி கூடங்களிலும் இரவு விடுதிகளிலும் தொற்றுக் குழுமம் ஏற்பட்டதை அடுத்து, அவற்றின் மூலம் சமூகத்தில் கிருமி பரவுவதைத் தடுக்கும் வகையில் ஜூலை 16 முதல் இரண்டு வார காலம் இத்தகைய விடுதிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேடிவி, இரவு விடுதிகள் தொடர்பான கொவிட்-19 குழுமங்களில் ஏறத்தாழ 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டால் ஏற்கெனவே நடைமுறைபடுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட இரவு விடுதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, வர்த்தக தொழில் அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை நேற்று கூட்டறிக்கையில் தெரிவித்தன.
தனி அறைகளை எல்லாம் மூடிவிட வேண்டும் என்றும் உணவு, பானச் சேவைக்கு பிரதான இடம் ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் தெரியும்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூட்டப்பட்ட தனி அறைகளின் வாசல்களைக் காட்டும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
விடுதிக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியிலிருந்து பார்க்க முடியும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங் களுக்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் அகற்றப்பட வேண்டும் என்று இரவு விடுதிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இரவு விடுதிகள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு முன், அவற்றின் ஊழியர்கள் அனைவரும் ஒருமுறை கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
அதையடுத்து, விடுதிகள் செயல்படத் தொடங்கியதும் ஒவ்வொரு வாரமும் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் விரைவுச் சோதனை நிலையத்துக்குச் சென்று அங்கு கொவிட்-19 பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.
இது உணவு, பானக் கடை
களின் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளைவிட கடுமையானவை.
உணவு, பானக் கடைகளின் ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அத்தகைய பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.
இரவு விடுதிகளின் நுழை
வாயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சோதனை நடத்த வரும் அதிகாரிகள் உடனே உள்ள செல்ல அனுமதிக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு அவர்கள் எவ்வித இடையூறும் விளைவிக்கக்கூடாது.
விடுதிகளுக்குள் என்ன நடக்கிறது என்பதை பார்க்க விரும்பும் பொதுமக்களையும் அவர்கள் தடுக்கக்கூடாது.
வர்த்தக, தொழில் அமைச்சிடமிருந்து அனுமதி பெறாமல் மீண்டும் செயல்படத் தொடங்கும் இரவு விடுதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு செய்யும் இரவு விடுதிகளின் உணவு விற்பனை, பொழுதுபோக்கு அம்சங்கள், மதுபான விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு விடுதிகள் உடனடியாக மூட உத்தரவிடப்படும்.
இதுவரை ஏழு இரவு விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை செயல்படத் தடை விதிக்கப் பட்டுள்ளன.
நியூ பிரிட்ஜ் சாலையில் உள்ள பியோனி கார்டன் ஃபுட் ஹவுஸ், லக்கி பிளாசாவில் உள்ள 3 கிங்ஸ் பப், பீச் சாலையில் உள்ள டிமேக்ஸ், சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள தி சார்ம், சிலிகி சாலையில் உள்ள ஐகோன் II ஆகியவை அவற்றில் அடங்கும்.

