மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கு எதிராக மலேசியத் தலை
நகர் கோலாலம்பூரின் மையப் பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரதமர் முகைதீனைப் பதவி விலகக் கூறி ஏறத்தாழ 400 பேர் பதாகைகளை ஏந்திக்கொண்டு முழக்கமிட்டனர்.
கறுப்பு ஆடை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மெர்டேக்கா சதுக்கத்துக்குள் நுழைந்துவிடாதிருக்க அவ்விடத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்குப் பல்வேறு இளையர், சமூக அமைப்புகளின் கூட்டணியான மக்கள் ஒருமைப்பாட்டுச் செயலகம் ஏற்பாடு செய்தது. மலேசியாவில் கொவிட்-19 மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து தங்கள் அதிருப்தியைக் காட்ட உருவப்பொம்மைகளைப் பிணங்களைப் போல வடிவமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் முகைதீனின் தலைமையின்கீழ் செயல்படும் அரசாங்கம், கொவிட்-19 நெருக்கடிநிலையை சரியான வகையில் எதிர்கொள்ளத் தவறிவிட்டது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்றும் அது வழக்கம்போல செயல்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் மலேசியர்கள் பலருக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி
களிடமிருந்து வாங்கிய கடன்
களைக் காலம் தாழ்த்தி அடைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் போக்குவரத்து போலிசாரும் சாதாரண உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுப்பட்டதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது. ஆர்ப்பாட்டம் என்ற பேரில் கொவிட்-19 விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் போலிஸ் படைத் தலைவர் அஸ்மி அபு காசிம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு எந்த ஓர் அமைப்பும் விண்ணப்பக் செய்யவில்லை என்றார் அவர். ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று கோலாலம்பூர் போலிஸ் படை கூறியது. ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

