கொவிட்-19 தொற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்கள்
கொவிட்-19 தொற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்குத் 'துணிகரத் திட்டங்களுக்கான நிதி'யின்கீழ் கூடுதல் நிதியாதரவு கிடைக்கும்.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுமுன் ஈட்டியதற்குப் பதிலாக இப்போதைய வருமானத்தை மதிப்பிடும் வகையில் தகுதி விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் 'துணிகரத் திட்டங்களுக்கான நிதி'யின்கீழ் உதவி பெற அதிகமான குடும்பங்கள் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது அந்நிதியின்கீழ், கொரோனா தொற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் விதமாக ஒருமுறை மட்டும் $1,000 வரை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் அல்லது கட்டாய விடுப்பில் இருந்த குடும்ப உறுப்பினரைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு அந்த உதவி வழங்கப்படுகிறது.
சென்ற மாதம் 13ஆம் தேதிவரை, கிட்டத்தட்ட 2,300 குடும்பங்கள் அந்த நிதியாதரவைப் பெற்றன.
கொரோனா தொற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கப்பட்டு, வேலை, வருமான இழப்பைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் குடும்பங்கள் இருமுறை நிதியுதவி பெற இயலும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தேசிய சமூக சேவை மன்றமும் தெரிவித்தன.
குடும்பத்தின் இப்போதைய மொத்த மாத வருமானம் $6,200 அல்லது அதற்கும் குறைவாக, அல்லது குடும்பத்தின் மாதாந்திர தனிநபர் சராசரி வருமானம் $2,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்கள், மற்ற தகுதி விதிகளையும் பூர்த்தி செய்தால், நிதியுதவிக்குத் தகுதிபெறும்.
"கொவிட்-19 தொற்றின் தாக்கம் நீடிக்கும் நிலையில், சில குடும்பங்கள் ஒருமுறைக்கு மேல் தனிமைப்படுத்தல் உத்தரவு அல்லது வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டி அல்லது கட்டாய விடுப்பில் இருந்திருக்கலாம் என்பதை அறிந்துள்ளோம். கொரோனா தொற்றிவிடுமோ என்ற அச்சத்துடன் வருமான இழப்பு குறித்த கவலையும் குறைந்த வருமானக் குடும்பங்களைக் கடுமையாகப் பாதித்து இருக்கலாம்," என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.
இந்நிலையில், துணிகரத் திட்டங்களுக்கான நிதியின்கீழ் உதவி கிடைப்பதற்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அந்தக் குடும்பங்கள் மீண்டும் விரைவில் சொந்தமாகக் காலூன்ற உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டில் சார்ஸ் தொற்றால் சிங்கப்பூர் பாதிக்கப்பட்டபோது துணிகரத் திட்டங்களுக்கான நிதி ஏற்படுத்தப்பட்டது.
சென்ற மாதம் 13ஆம் தேதிவரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவுவதற்காக அந்நிதிக்கு சமூகத்திடம் இருந்து $18.4 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டது. அதில் கிட்டத்தட்ட $2.7 மில்லியன், 2,500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தகுதி விதிகளை நிறைவேற்றும் பட்சத்தில், 'காம்கேர்', கொவிட்-19 மீட்சி மானியம் போன்றவற்றின் பயனாளிகளும் துணிகரத் திட்டங்களுக்கான நிதியின்கீழ் கூடுதல் உதவி கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உதவிகோரும் குடும்பங்களில் ஒருவரேனும் சிங்கப்பூரராக அல்லது நிரந்தரவாசியாக இருக்க வேண்டும்.
துணிகரத் திட்டங்களுக்கான நிதியின்கீழ் உதவிகோர விரும்பும் குடும்பங்கள் https://go/gov.sg/tcf என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுவோர் 1800-222-0000 என்ற நேரடித் தொலைபேசி எண் வழியாக காம்கேர் அமைப்பை அழைக்கலாம் அல்லது sk_SSO@msf.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது அருகில்உள்ள சமூக சேவை அலுவலகத்தை நாடலாம்.

