உலகம் முழுவதும் கொவிட்-19 கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை புதன்கிழமை 200 மில்லியனைக் கடந்துவிட்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
தடுப்பூசி இயக்கம் வேகமடையாத, சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் சரியில்லாத பகுதிகளில் டெல்டா கிருமி பெரும் மிரட்டலாக உருவெடுக்கிறது என்றும் அபாயச்சங்கு ஊதப்பட்டு இருக்கிறது.
உலகம் எங்கும் கொவிட்-19 தொற்று கூடி வருகிறது. இது ஏழை, பணக்கார நாடுகளுக்கு இடையில் தடுப்பூசி இயக்கத்தில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டுகிறது.
உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் கொவிட்-19 தொற்று அதிகரிக்கிறது. அவற்றில் பல நாடுகளும் தங்கள் மக்களில் பாதிப்பேருக்குக் கூட இன்னமும் முதல் ஊசியைப் போடவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்படும் வரை கொவிட்-19 எதிர்ப்புச்சக்தி ஊக்க மருந்து இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிக வருமானம் உள்ள நாடுகளுக்குச் செல்லும் தடுப்பூசி மருந்தை குறைந்த வருமான நாடுகளுக்கு உடனடியாகத் திருப்பிவிட வேண்டும் என்று இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கோரிக்கை விடுத்தார். கொரோனா தலைகாட்டியது முதல் உலக மக்களில் குறைந்தபட்சம் 2.6 விழுக்காட்டினருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தொற்று தலைகாட்டிய முதல் ஓராண்டிற்குப் பிறகுதான் 100 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே மேலும் 100 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 காரணமாக உலகம் முழுவதும் 4.4 மில்லியன் பேர் மாண்டு விட்டனர். அமெரிக்கா, பிரேசில், இந்தோனீசியா, இந்தியா, ஈரான் நாடுகளில் ஏழு நாள் தொற்றின் சராசரி அளவு, உலகம் முழுவதும் ஒவ்வொருநாளும் ஏற்படக்கூடிய புதிய தொற்றில் ஏறத்தாழ 38% ஆக இருக்கிறது.
டெல்டா உருமாறிய கிருமி முதன்முதலாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கிருமி அதிவேகமாகப் பரவக்கூடிய ஆற்றல் உடையது. உலகில் கிருமி தொற்றியோரில் ஏழு பேரில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 97 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என வெள்ளை மாளிகை கொவிட்-19 குழு கூறுகிறது.