சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்பு வட்டாரங்களில் ஏழு வீடமைப்புத் திட்டங்களின்கீழ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) 4,989 புதிய 'பிடிஓ' (தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும்) வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக குவீன்ஸ்டவுன், ஜூரோங் ஈஸ்ட் வட்டாரங்களிலும் இப்புதிய பிடிஓ வீடுகள் அமைந்துள்ளன.
முதிர்ச்சியடைந்த குடியிருப்பு வட்டாரங்களில் ஆகப் பழைமையான வட்டாரமான குவின்ஸ்டவுனில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 'குவீன்'ஸ் ஆர்க்' வீடமைப்புத் திட்டத்தின்கீழ் இரு புளோக்குகளில் மொத்தம் 610 மூவறை, நான்கறை வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
வீடுகளின் விலை மானியமின்றி மூவறை வீட்டுக்கு $382,000 முதல் நான்கறை வீட்டுக்கு $540,000 வரை இருக்கும். இவ்வீடுகள் தயாராவதற்கு வீட்டு உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முதிர்ச்சியடையா வட்டாரமான ஜூரோங் ஈஸ்ட்டிலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு புதிய பிடிஓ வீடுகள் அமைந்துள்ளன. இவ்வட்டாரத்தில் ஈரறை, மூவறை, நான்கறை வீடுகள் என மொத்தம் 569 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மூவறை வீட்டுக்கு $237,000 எனத் தொடங்கி நான்கறை வீட்டுக்கு $347,000 வரை வீடுகளின் விலை இருக்கும்.
இவற்றைத் தவிர தெம்பனிஸ், ஹவ்காங் வட்டாரங்களில் தலா இரண்டு பிடிஓ திட்டங்கள், காலாங்/வாம்போ வட்டாரத்தில் ஒரு திட்டம் எனப் புதிய பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. காலாங்/வாம்போ வீடமைப்புத் திட்டத்தில் வாடகை வீடுகள் கொண்ட ஒரு புளோக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள் இம்மாதம் 17ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும்.
இதற்கிடையே, கொவிட்-19 நெருக்கடியால் கட்டுமானத்துறைக்குப் பலத்த பாதிப்பு என்றும் அதனால் பல பிடிஓ திட்டங்கள் தடைப்பட்டன என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
மேலும் செய்தி - பக்கம் 2ல்

