தீமிதித் திருவிழா இவ்வாண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று நடைபெறுகிறது. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட பக்தர்கள் மட்டுமே அன்று கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அல்லது அதற்கு முன்னதாக அவர்கள் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
பக்தர்கள் தீமிதியில் கலந்துகொள்ள இணையம் வழி அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம். மேலும், பெருமாள் கோவிலிலிருந்து மாரியம்மன் கோவிலுக்கான ஊர்வலம் நடைபெறாது. பக்தர்கள் நேரடியாக மாரியம்மன் கோவிலுக்கு வரவேண்டும்.
தீமிதிக்கு முன்பும் பின்பும் நடைபெறும் பால்குடம், அங்க பிரதட்சணம் போன்ற சடங்குகள் நடைபெறும். இந்தச் சடங்குகளில் ஒரு சமயத்தில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எத்தனை பேர் கலந்துகொள்ளலாம், குறிப்பாக என்னென்ன நடைபெறலாம் போன்ற விவரங்களை அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின் தகவல் தெரிவிக்கப்படும். தேர் ஊர்வலம் இருப்பதும் உறுதி செய்யப்படவில்லை. ஊர்வலம் இருந்தாலும், தேர் நிற்காமல் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதாகத்தான் இருக்கும்.
தீமிதி நாளன்று கோவிலுக்குள் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த மேல்விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டின் தீமிதித் திருவிழா சென்ற ஆண்டைவிட அதிகமான பக்தர்களுடன் சிறப்பாக நடைபெறவிருந்தாலும் கிருமித்தொற்றுக்கு முன்பு நடைபெற்ற தீமிதித் திருவிழாக்கள் போல் இருக்காது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பான முறையில் தீமிதி நடைபெறும்.
தீமிதியை வீட்டிலிருந்தே பார்க்க விரும்புபவர்களுக்கு அந்நிகழ்வு இணையம் வழி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
செய்தி: இந்து இளங்கோவன்

