கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு, பாதிக்கப்பட்டோருடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அலசி ஆராய்ந்து, அவர்களை அடையாளம் காண்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து இவர்
களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 விழுக்காடு ஏற்றம் கண்டு இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் நோய்வாய்ப்பட்டிருப்போரின் எண்ணிக்கை அண்மையில் கூடியிருப்பதால், பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடை
யாளம் காண்போரின் எண்ணிக்கை 330லிருந்து 480ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்த 14 நாட்கள் தேவைப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார். அடையாளம் காணும் குழுவில் பல்வேறு அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் ஆணை பெற்ற கழகங்கள் மற்றும் பொதுச் சேவையைச் சேர்ந்த தொண்டூழியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பணிக்காக மற்ற சேவை நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, கொவிட்-19 நோயாளிகளுக்காக நாடெங்கும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஏறத்தாழ 100 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
"கொவிட்-19 பாதிப்பு ஒருவேளை அதிகரித்தால் நமது தீவிர சிகிச்சைப் பிரிவு
வசதிகளை விரிவுபடுத்த தயாராக இருக்கிறோம்," என்று அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்க அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைப் படிப்படியாக விரிவு
படுத்த பொது மருத்துவமனை
களுடன் இணைந்து செயல்
படுவதாக அது கூறியது.
பொது படுக்கைப் பிரிவுகளை தீவிர சிகிச்சைப் பிரிவுகளாகவோ
அல்லது தனிமைப்படுத்தும் அறைகளாகவோ விரைவாக மாற்றியமைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. அதுமட்டுமல்லாது, செயற்கை
சுவாசக் கருவிகள், மருந்துகள் ஆகியவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்துள்ளதாக அது கூறியது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கடந்த ஆண்டில் முதல்முறையாக தலைதூக்கியபோது இருப்பில் இருந்த தனிமைப்
படுத்தும் அறைகளைவிட தற்போது மூன்று மடங்கு அதிக அறைகள் இருப்பதாக தேசிய தொற்றுநோய் எதிர்ப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யூ சின் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை வழங்குவதில் முழு கவனம் செலுத்தும் வகையில் அவசரமற்ற சிகிச்சைகள்
ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள கொவிட்-19 நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தேசிய தொற்றுநோய் எதிர்ப்பு நிலையம் சிகிச்சை அளித்து வருவதாக பேராசிரியர் லியோ கூறினார். இலேசாகப் பாதிக்கப்பட்டவர்கள் சமூகப் பராமரிப்பு வசதிகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள சமூகப் பராமரிப்பு வசதிகளில் தற்போது 5,000க்கும் மேற்பட்டோர் தங்கலாம் என்றும் தேவை ஏற்பட்டால் கூடுதல் இடங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

