ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் சக பள்ளி மாணவர் ஒருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 16 வயது மாணவர் ஒருவர், விசாரணைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 13) முதன்முறையாக காணொளி அழைப்பு மூலம் தமது பெற்றோருடன் பேசினார்.
“குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே காணொளி அழைப்புக்கு போலிஸ் ஏற்பாடு செய்தது,” என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகப் பேச்சாளர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
அரசு நீதிமன்றத்தில் காணொளிக் காட்சி மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை கடைசியாக அந்த மாணவர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது பேசிய அவரது வழக்கறிஞர்கள், அந்த மாணவரிடம் நலன் விசாரிப்பதற்காக அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு கோரியிருந்தனர்.
அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் அப்போது அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திருந்தனர். அந்த இளையர் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
அந்த இளையரின் வழக்கறிஞர்களின் கோரிக்கையை மாவட்ட நீதிபதி பிரெண்டா டானும் மறுத்துவிட்டார். குற்றஞ்சாட்டப்பட்டவர் அவரது பெற்றோருடன் பொருத்தமான நேரத்தில் பேச ஏற்பாடு செய்யப்படக்கூடும் என்று அவர் சொன்னார்.
அந்த இளையரின் வயது 18க்கு கீழ் இருப்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறைச்சாலையில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 19ஆம் தேதி பள்ளியின் நான்காவது தளத்தில் உள்ள கழிவறை ஒன்றில் 13 வயது மாணவர் ஒருவரை அந்த 16 வயது மாணவர் கொன்றதாக அதற்கு அடுத்த நாள் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.