கொள்ளைநோய் பரவல் சூழல் காரணமாக மனிதவள பற்றாக் குறையால் பாதிக்கப்பட்ட, கட்டுமானம், கடல்துறை கப்பல் பட்டறை, செயல்முறைப் பொறியியல் துறைகள், வேலை அனுமதியில் (வொர்க் பர்மிட்) உள்ள தங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் புதிய ஊழியர்களின் வருகையை எளிதாக்கவும் உதவும் வகையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையே வேலை அனுமதி காலாவதியாகும் வெளிநாட்டு ஊழியர்கள், அவர்கள் தகுதி நிர்ணயத்தை எட்டாவிட்டாலும்கூட, மேலும் ஈராண்டுகளுக்கு வேலை அனுமதியைப் புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மனித வள அமைச்சு நேற்று தெரிவித்தது.
அதிகபட்ச காலம் வேலை அனுமதியில் வேலை பார்த்தோர், அதிகபட்ச வயது வரம்பை எட்டியவர்களும் இதில் அடங்குவர். ஒரு நிறுவனத்தில், வேலை அனுமதி அட்டையில் உள்ள ஊழியர்களில் குறைந்தது 10 விழுக்காட்டினர் உயர் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.
இந்த தற்காலிக கட்டுப்பாடு நீக்கமும் ஏனைய உதவிகளும் மேல் குறிப்பிட்ட மூன்று துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட ஊழியர் நெருக்கடியைச் சமாளிக்க உதவும்.
கடந்த ஆண்டு, இந்தத் துறைகளில் வேலை அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000 ஆகக் குறைந்துள்ளது.
இந்தத் துறைகள் தங்கள் செயல்பாடுகளுக்கான ஊழியர் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதையும் முக்கிய திறன்களைப் பாதுகாப்பதையும் இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்று மனிதவளத் துறை அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
புக்கிட் மேராவில் உள்ள 'ஸ்ட்ரெய்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் சிங்கப்பூர்' நிறுவனம் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அறிய டாக்டர் டான் நேற்று அங்கு வருகையளித்தார்.
கட்டுமானம், கடல்துறை கப்பல் பட்டறை -செயல்முறைப் பொறியியல் துறைகள் பொருளியலின் முக்கிய உந்துசக்திகள் என்று அவர் சொன்னார்.
இத்துறைகள் தங்கள் வர்த்தகங்களை மாற்றியமைப்பதற்கும், மனிதவள சார்புநிலையைக் குறைப்பதற்கும் அரசாங்க முகவைகள் இவற்றுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த முயற்சிகளுக்கு காலம் எடுக்கும் என்ற டாக்டர் டான், புதிய நடவடிக்கைகள் உடனடி ஊழியர் கவலைகளைத் தீர்வுகாணும் எனக்கூறினார்.
கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக சிங்கப்பூரில் நுழைய முடியாத இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த அனைத்து வேலை அனுமதி ஊழியர்களுக்கும் கொள்கை ரீதியாக ஒப்புதல்கள் நீட்டிக்கப்படும். இதில் எம்பிளாய்மென்ட், எஸ்பாஸ் வொர்க் பர்மிட் ஆகியவை அடங்கும்.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஆறு மாத கால நீட்டிப்பு தானாகவே வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், ஊழியர்களை மீண்டும் அழைப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில் இது மேலும் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை, சீனா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பங்களாதேஷ், மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய வேலை அனுமதிகளுக்கும் புதுப்பிப்பிக்கும் ஊழியர் தீர்வைக்கான விலக்கைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வேலைக் காலம் நீக்கப்படும்.
கட்டுமானத் துறையில் தற்போதைய மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க, சிங்கப்பூர் குத்தகையாளர்கள் சங்கத்துடன் (ஸ்கால்) இணைந்து, முன்னர் வொர்க் பர்மிட்டில் வேலை செய்து, பணி முடிந்த அனுபவமுள்ள ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய விரும்பினால் அவர்களது வேலை அனுமதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவர்களுக்கு 30 நாள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். அக்காலகட்டத்தில் தொழிற்சங்கம் வீட்டுவசதி, உணவு போன்ற தேவைகளை வழங்கும். அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தரும்.
வேலை அனுமதி பெற்றவர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட டாக்டர் டான், "அவர்கள் திரும்பிச் சென்று, வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை மீண்டும் முதலிலிருந்து செய்வதற்குப் பதிலாக இங்கிருந்தபடியே வேலையைத் தொடர தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவது பயனுள்ளதாக இருக்கும்," என்றார்.

