மலேசியாவில் கொவிட்-19 கிருமித் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 12,228 ஆனது. அங்கு நேற்று மேலும் 260 பேர் மாண்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று விடுத்த அறிக்கையில் கூறினார்.
அத்துடன், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,096 பேர் இருப்பதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். மலேசியாவில் கிருமித் தொற்றால் ஆக அதிகமாக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி 1,097 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
மேலும், அந்நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000க்கு மேல் சென்றுள்ளது. நேற்று நண்பகல் நிலவரப்படி மலேசியாவில் 20,670 பேருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டதாக நேற்றைய அறிக்கை கூறியது.
அவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏதும் போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது முழுமையாகப் போட்டுக் கொள்ளாதவர்கள் என்று டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார். தொடர்ந்து சிலாங்கூரில் தான் ஆகி அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதம் கூடியுள்ள மாநிலங்களில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அல்லது தீவிர கவனிப்பு தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கோலாலம்பூர், லாபுவான், சரவாக், புத்ரராஜெயா, நெகிரி செம்பிலான் போன்றவற்றில் அப்போக்கு காணப்பட்டதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

