ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டில் போர் முடிவிற்கு வந்துவிட்டதாகத் தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
தலிபான் படைகள் காபூல் நகரினுள் நேற்று முன்தினம் நுழைந்ததும், ரத்தக்களரியைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறி, ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டுத் தப்பியோடி விட்டார்.
"ஆப்கான் மக்களுக்கும் தலிபான் போராளிகளுக்கும் இன்றைய நாள் (நேற்று) மிகச் சிறந்த நாள். தங்களின் 20 ஆண்டுகாலப் போராட்டங்களுக்கும் தியாகங்களுக்குமான பலனை அவர்கள் கண்டுள்ளனர்," என்று தலிபான் பேச்சாளர் முகம்மது நயீம் தெரிவித்தார்.
ஆப்கானில் அமையும் புதிய அரசு எத்தகையதாக இருக்கும் என்பது விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்ற அவர், தனிமைப்படுத்தப்படுவதை தலிபான் விரும்பவில்லை என்றும் அமைதியான அனைத்துலக உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, காபூலில் உள்ள தனது தூதரகத்திலிருந்து கொடியை இறக்கிய அமெரிக்கா, தூதரகப் பணியாளர்கள் அனைவரையும் விமான நிலையத்திற்கு இடம்பெயரச் செய்தது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை அமெரிக்கப் படைகள் தம்வசம் கொண்டு வந்தன.
ஆயினும், நாட்டைவிட்டு வெளியேற விரும்பி, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நேற்று காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அமெரிக்கப் படையினர் வானை நோக்கிச் சுட்டு, அவர்களை எச்சரித்தனர். சரக்கு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இத்தகைய சூழலில், ஆப்கான் வான்வெளியைத் தவிர்க்கும்விதமாக முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது விமானங்களின் பயண வழிகளை மாற்றி வருகின்றன. இந்த மாற்றம், அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்லும் பல விமானங்களைப் பாதித்துள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.