மலேசியாவின் அடுத்த பிரதமராக அம்னோ கட்சித் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆதரவு நல்கியதை அந்நாட்டு காபந்து பிரதமரும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணித் தலைவருமான திரு முகைதீன் யாசின் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், திரு இஸ்மாயில் பிரதமராக பொறுப்பேற்றால் அவரது அமைச்சரவையில் இடம்பெறுவோர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்காதவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை திரு முகைதீன் இன்று (ஆகஸ்ட் 19) முன்வைத்தார்.
தேசிய அரண்மனைக்கு இன்று பிற்பகல் 1 மணியளவில் வந்த திரு முகைதீன், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டார். அரண்மனையைவிட்டு புறப்பட்டபோது அவர் ஊடகங்களிடம் பேசவில்லை.
அடுத்த மலேசிய பிரதமராக திரு இஸ்மாயிலுக்கான தங்களது ஆதரவை சரிபார்க்க 114 நாடாளுமன்ற உறுப்பினர்களை மலேசிய மாமன்னர் சந்தித்து வருகிறார்.

