பூஸ்டர் கொவிட்-19 தடுப்பூசி பற்றி சிங்கப்பூர் ஆய்வு செய்கிறது. அதே நேரம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு மூன்றாம் தடுப்பூசி போடலாமா என்பது பற்றிய பரிசீலனை நடப்பதாக கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்தது.
அதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலேயே தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் அது கூறியது. பணிக்குழுவின் இணைத் தலைவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவிக்கையில், பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கையை அரசாங்கம் தொடங்கக்கூடும் என்றார்.
மேலும் அவர், “பொதுவாக, தடுப்பூசி நடவடிக்கையை மற்ற நாடுகள் தொடங்கிய பின்னர்தான் நாம் தொடங்கினோம். பூஸ்டர் தடுப்பூசி விவகாரத்திலும் மற்ற நாடுகள் பெற்ற அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டு, நமக்குச் சாதகமான நிலைகளைக் கடைப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.
பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் குறித்து கொவிட்-19 தடுப்பூசிக்கான சிங்கப்பூர் நிபுணர்கள் குழு தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அதனைப் பரிந்துரைப்பதற்கு முன்னர் இதர நாடுகளின் அனுபவங்களை அக்குழு ஆராயும் என்றும் திரு ஓங் கூறினார்.
மூத்தோருக்கும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியோருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதைத் இஸ்ரேல் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
செப்டம்பரில் இதனைத் தொடங்க இருப்பதாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் நோய் தடுப்பு, கட்டுப்பாடு நிலையம் அண்மையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பரிந்துரைத்திருந்தது. இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட எட்டு மாதங்களுக்குப் பின்னர் இதனைப் போடலாம் என அது ஆலோசனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட நேரத்தில் மிகவும் குறைவான நோயெதிர்ப்பு ஆற்றல் காணப்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியை சிங்கப்பூர் போடத் தொடங்குவது என்பது நிபுணர் குழுவின் பரிந்துரையைப் பொறுத்தது என்று அமைச்சர் ஓங் கூறினார்.
புற்றுநோயாளிகள், இறுதிக் கட்ட ரத்த சுத்திகரிப்பில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள் போன்றோரை அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டினார்.