முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சிங்கப்பூர்வாசிகள், அடுத்த மாதம் 8ஆம் தேதிமுதல் இல்லத் தனிமை உத்தரவின்றி ஜெர்மனிக்குச் சென்று வரலாம்.
இல்லத் தனிமைக்குப் பதில், பயணிகள் பல்வேறு கொவிட்-19 பரிசோதனைகளைச் செய்துகொள்வதுடன் குறுகிய காலத்திற்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏஎஸ்) தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் இன்று (ஆகஸ்ட் 19) தகவல் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வர தன்னிச்சையாக அனுமதிக்கப்படுவர் என்றும் அதன்படி ஜெர்மனியும் புருணையும் முதல் என்றும் சிங்கப்பூர் முன்னதாக அறிவித்தது.
ஜெர்மனி ஏற்கெனவே அதன் எல்லையைத் தன்னிச்சையாக சிங்கப்பூருக்குத் திறந்துவிட்டது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து ஜெர்மனி செல்வோர், தனிமை உத்தரவின்றி நாடு திரும்பலாம்.
மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள்வரை தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில், மக்காவ், ஹாங்காங் இடங்களிலிருந்து வருவோருக்கும் சிங்கப்பூர் ஒருதலைப்பட்சமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது.
இவ்விரு நகரங்களிலிருந்து வரும் குறுகியகால வருகையாளர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலோ போட்டுக்கொள்ளாதிருந்தாலோ இம்மாதம் 26ஆம் தேதிமுதல் தனிமை உத்தரவு இன்றி சிங்கப்பூருக்கு வரலாம். இருப்பினும், அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுவதுடன் அவர்களுக்கு காப்புறுதியும் இருக்க வேண்டும்.
‘தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணப் பாதைகள்’ (விடிஎல்) என்ற திட்டத்தின்கீழ் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு இப்புதிய ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாக ‘சிஏஏஎஸ்’ குறிப்பிட்டது.
திட்டத்தின்கீழ் பயணம் செய்வோர் விமானப் பயணத்திற்கு 48 மணி நேரம் முன்னதாக ஒரு கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். பின்னர், சாங்கி விமான நிலையத்தை அடைந்ததும் மீண்டும் ஒரு பரிசோதனையைச் செய்திட வேண்டும்.
வந்தடைந்து மூன்றாம் மற்றும் ஏழாம் நாட்களன்று சிங்கப்பூரின் குறிப்பிட்ட சில மருந்தகங்களில் அவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.