அங் மோ கியோ அவென்யூ 3ல் இன்று (ஆகஸ்ட் 25) காலை எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்று மோதியதால் 46 வயது பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
கவனமின்றி ஓட்டி மரணம் விளைவித்ததற்காக அந்தப் பேருந்தின் 56 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தின் பின் சக்கரத்திற்குக்கீழ் அந்த மாது சிக்கியிருந்தார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை மீட்டனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் குறித்து இன்று காலை 6.47 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தாங்கள் மிகவும் வருத்தப்படுவதாகவும் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து உதவி வழங்க அவரது உறவினர்கள், தொடர்புகொள்ள முயற்சி எடுத்து வருவதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

