கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்கும் பாதுகாப்பு, ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் தன்மையுடையவை என்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
'ஃபைசர்/பயோஎன்டெக்', 'ஆக்ஸ்ஃபோர்டு/ஆஸ்ட்ரஸெனகா' ஆகிய தடுப்பூசிகளை இருமுறை போட்டுக்கொண்டு ஆறு மாதங்களில் தடுப்பூசி ஆற்றல் குறைவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், மூன்றாவதாக ஒரு 'பூஸ்ட்டர்' தடுப்பூசி தேவைப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஐந்து, ஆறு மாதங்களில் கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் 'ஃபைசரின் ஆற்றல், 88 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாகக் குறைந்துவிடுவதாக பிரிட்டனின் 'ஸோயி கொவிட்' ஆய்வு காட்டி உள்ளது. 1.2 மில்லியனுக்கு மேற்பட்ட பரிசோதனை முடிவுகளிலிருந்து பெறப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிருமித்தொற்றுச் சம்பவங்களும் தொற்று பரவும் வாய்ப்பும் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசியால் பாதுகாப்பு கிடைத்துவிட்டது எனப் பொறுத்திருக்காமல் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று பிபிசி தொலைக்காட்சியிடம் ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் கூறினார்.

