புக்கிட் பாத்தோக், கிளமெண்டி, புக்கிட் பாஞ்சாங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) ஐந்து வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய மேலும் தாமதமாகலாம். அந்தக் கட்டுமானத் திட்டங்களின் முக்கிய ஒப்பந்ததாரர் நொடித்துப்போனதே இதற்குக் காரணம்.
'ஸ்கை விஸ்டா அட் புக்கிட் பாத்தோக்', புக்கிட் பாஞ்சாங்கில் 'செஞ்சா ஹைட்ஸ்', 'செஞ்சா ரிட்ஜஸ்', உட்லண்ட்சில் 'மார்சிலிங் குரோவ்,' கிளமெண்டியில் 'வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ' ஆகியவையே பாதிக்கப்பட்டுள்ள அந்த ஐந்து 'பிடிஓ' திட்டங்கள். இந்த ஐந்து திட்டங்களில் மொத்தம் 2,982 வீடுகள் அமைகின்றன.
'கிரேட்எர்த் கார்ப்பரேஷன்', 'கிரேட்எர்த் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற அத்திட்டங்களின் முக்கிய ஒப்பந்ததாரர்கள் நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால், கட்டுமானப் பணிகள் தாமதமாகலாம் என்று அந்த வீடுகளை வாங்குவோரிடம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று முன்தினம் தெரிவித்துவிட்டது.
எவ்வளவு காலம் தாமதமாகும் எனக் கூறப்படவில்லை. இருப்பினும், புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் அதுகுறித்து வீடு வாங்குவோரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று வீவக கூறியிருக்கிறது.
அரசாங்கத்தின் உதவி கிட்டியபோதும், அந்த ஐந்து வீடமைப்புத் திட்டங்களைத் தன்னால் முடிக்க இயலாது என்று கிரேட்எர்த் நிறுவனம் சென்ற வாரம் தெரிவித்துவிட்டதாக கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பணம் வழங்குவது போன்ற சாத்தியமுள்ள தெரிவுகள் மூலமாக கிரேட்எர்த் நிறுவனத்திற்கு உதவும் வழிகளைத் தான் ஆராய்ந்ததாக கழகம் தெரிவித்தது. ஆயினும், செயல்பாடுகளைத் தொடரும் அளவிற்கு கிரேட்எர்த் நிறுவனத்தின் நிதி நிலைமை இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
இம்மாதம் 20ஆம் தேதியில் இருந்து அந்த ஐந்து கட்டுமானத் தளங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எஞ்சியிருக்கும் பணிகளை நிறைவுசெய்ய முடிந்தளவு விரைவில் புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவர் என்று கழகம் கூறி இருக்கிறது.
அந்த ஐந்து வீடமைப்புத் தளங்களில் துப்புரவுப் பணிகளையும் பூச்சிக் கட்டுப்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்வதற்குத் தற்காலிக ஒப்பந்ததாரர்கள் பணியமர்த்தப்படுவர்.
மொத்தம் 230 வீடுகளைக் கொண்டுள்ள செஞ்சா ரிட்ஜஸ் வீடமைப்புத் திட்டப் பணிகள் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டிலும் 552 வீடுகளைக் கொண்டுள்ள செஞ்சா ஹைட்ஸ் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலும் நிறைவுபெறுவதாக இருந்தன.
ஸ்கை விஸ்டா அட் புக்கிட் பாத்தோக் திட்டத்தில் 257 வீடுகள் அமைகின்றன. அதற்கான பணிகள் அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முடிவடைவதாக இருந்தன.
அதேபோல, 1,246 வீடுகள் அமையும் மார்சிலிங் குரோவ் திட்டத்திற்கான பணிகள் 2022 கடைசிக் காலாண்டிலும் 697 வீடுகளைக் கொண்ட வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ திட்டப் பணிகள் 2023 இரண்டாம் காலாண்டிலும் நிறைவடைவதாக இருந்தன.
இதனிடையே, கொவிட்-19 பரவல் காரணமாக மனிதவளத்திலும் விநியோகத்திலும் ஏற்பட்ட இடையூறுகளால், இந்த ஐந்து திட்டங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தேதி ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.
"இந்தத் தாமதங்கள், வீடு வாங்குவோரைப் பாதிக்கும்; அவர்களின் வாழ்க்கைத் திட்டங்களைச் சீர்குலைக்கும். இந்நிலையில், அண்மைய நிகழ்வாலும் அவர்கள் ஏமாற்றமடைவர்," என்று வீவக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கால தாமதத்தைக் குறைக்கவும் அதே வேளையில் பாதுகாப்பும் தரமும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் மாற்று ஒப்பந்ததாரர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கழகம் தெரிவித்து இருக்கிறது.