சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இன்றைய (ஆகஸ்ட் 29) நிலவரப்படி, நாட்டின் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தத் தகவலை இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங், “கொவிட்-19க்கு எதிராக மீள்திறனுடன் இருக்க, சிங்கப்பூர் மேலும் ஒரு படி முன்னெடுத்துள்ளது,” என்றார்.
இந்நிலையில், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் குழுவினரின் முயற்சிகளால் 4,300க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ஓங் தெரிவித்தார். அத்தகையோர் நடமாட இயலாத வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர்.
வீட்டிற்கு வந்து தடுப்பூசி போடுவது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய 700 கோரிக்கைகள் கிடைப்பதாக திரு ஓங் கூறினார். வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் குழுக்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு மும்மடங்காக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், காத்திருப்பு நேரம் எட்டிலிருந்து நான்கு வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
“வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை செப்டம்பர் இறுதிக்குள் நிறைவுசெய்ய நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்றார் திரு ஓங்.