தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ உறுதி
இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் இயற்றப்படும்; குறைந்த வருமானம் ஈட்டுவோர்க்குக் கூடுதல் ஆதரவு
சிங்கப்பூரில் எந்தவோர் இனத்திற்கும் சிறப்புரிமைகள் இல்லை என்றும் எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படுகின்றன என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கடின முயற்சியால் எட்டப்பட்ட இன நல்லிணக்கத்தை வளர்ப்பதும் எவர் ஒருவரும் பின்தங்கிவிடாத பொருளியல் வளர்ச்சியை உறுதிசெய்வதும் பிரதமரின் 16வது தேசிய தினப் பேரணி உரையின் முக்கியக் கருப்பொருள்களாக விளங்கின.
கடந்த ஆண்டு தேசிய தினப் பேரணி உரை இடம்பெறாத நிலையில், இம்முறை 'மீடியாகார்ப்'பில் நேரடியாகவும் 'ஸும்' வழியாக மெய் நிகர் முறையிலும் இடம்பெற்றது.
ஆர்ச்சர்ட் சாலையில் கலப்பினத் தம்பதியரைப் பலதுறைத் தொழில்கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இடைமறித்து இனம் சார்ந்து வாதிட்டது உள்ளிட்ட சில இனவாத நிகழ்வுகளைப் பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அவற்றுள் பல சம்பவங்கள் இந்தியர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். வேலை அனுமதி அட்டை பெற்ற இந்திய ஊழியர்கள் அதிகளவில் இருப்பது அல்லது உருமாறிய 'டெல்டா' கொவிட்-19 கிருமி முதன்முதலில் இந்தியாவில் உருவெடுத்தது அதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
"உருமாறிய 'ஆல்ஃபா' கிருமிக்காக பிரிட்டிஷ்காரர்களை, 'கேடிவி' தொற்றுக் குழுமத்திற்காக வியட்னாமியர்களை அல்லது முதன்முதலில் வூஹானில் கொரோனா கிருமி தலையெடுத்ததற்காகச் சீனர்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியாதோ, அதுபோல இந்தியர்களைச் சாடுவது நியாயமற்றது," என்று பிரதமர் சொன்னார். நமக்கு ஏற்படும் விரக்தி, இன நல்லிணக்கத்தைப் பாதிக்க அனுமதித்துவிடக்கூடாது என்றார் பிரதமர்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் பல இன மக்களிடையே சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்காக இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தை அரசாங்கம் இயற்றும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
இனவாதக் குற்றங்களுக்கான தண்டனைகளுடன், அக்குற்றத்தில் ஈடுபடும் ஒருவர், மற்ற இனங்கள் குறித்து அறிந்து, நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளும் மென்மையான அணுகுமுறைகளையும் அச்சட்டம் கொண்டிருக்கும்.
குறைந்த வருமான ஊழியர்களின் வருமானத்தை உயர்த்தி, அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிப்பது குறித்தும் பிரதமர் பேசினார். கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் குறைந்த வருமான ஊழியர்கள் பலர், துப்புரவு, உணவு விநியோகம், பாதுகாவல் என முன்களத்தில் பணியாற்றினர். ஆயினும், குறைவான சேமிப்பு, வேலையிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு என்று ஆபத்தான சூழலிலும் அவர்கள் இருந்தனர்.
இதற்குத் தீர்வுகாணும் விதமாக, அதிகமான ஊழியர்கள் பயனடையும் வகையில் படிப்படியான சம்பள உயர்வு முறையை அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது.
"அடுத்த ஆண்டில் சில்லறை விற்பனை, அதன்பின் உணவு சேவைகள், கழிவு மேலாண்மை என மேலும் பல துறைகள் படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் வரும்," என்று திரு லீ தெரிவித்தார்.
விநியோக ஊழியர்கள், அதுபோன்ற பணிகளில் இருப்போரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் உள்ளூர்வாசிகள் அனைவர்க்கும் குறைந்தபட்சம் உள்ளூர் தகுதி ஊதியத்தை வழங்க வேண்டியிருக்கும்.
வேலை அனுமதி அட்டை வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்கள் காரணமாக, நடுத்தர வருமான சிங்கப்பூரர்கள் வேலை தொடர்பில் கவலைப்பட்டதாக திரு லீ கூறினார்.
கொரோனா பரவல் ஏற்படுத்திய நிச்சயமில்லாப் பொருளியல் சூழலால் நடுத்தர வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள் அதிக நெருக்கடியை உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் வேலைசெய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள் தகுதியானவர்களாக இருப்பதை உறுதிசெய்ய, எஸ்-பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களுக்கான ஊதிய வரம்பு அதிகரிக்கப்பட்டு, தகுதி நிபந்தனைகள் கடுமையாக்கப்படுவது தொடரும்.
வழிகாட்டி நடைமுறைகளைச் சட்டமாக்கும் வகையில் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணிக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். வேலையிடப் பாகுபாட்டை எதிர்கொள்ள ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.
இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர், தாங்கள் விரும்பினால் தலையங்கி அணிந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
தொடர்புகளின் தடமறிவோர், அவசர மருத்துவ வாகன ஓட்டுநர்கள், தடுப்பூசி நிலைய ஊழியர்கள் போன்ற, கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த உதவிய முன்களப் பணியாளர்களுக்குப் பிரதமர் லீ புகழாரம் சூட்டினார்.
"இயல்பான நேரங்களில், சிங்கப்பூரர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை உணராமல்இருக்கலாம். ஆனால் இப்போது, ஒரு தலைமுறை நெருக்கடியின்போது, நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நமக்கும் இவ்வுலகிற்கும் காட்டியுள்ளோம். அவர்கள் அறியப்படாத நாயகர்கள், அது நாம்தான்!" என்றார் பிரதமர்.
பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள்
♦ புதிய வளர்ச்சி, வேலைகள், வளப்பத்தை உருவாக்குதல்.
♦ குறைந்த வருமான ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு.
♦ விநியோக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனிதவள அமைச்சு ஆராயும்.
♦ வேலையிடங்களில் நியாயமாக நடத்தப் படுவதை உறுதிசெய்ய, முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டி நெறிமுறைகள் சட்டமாக்கப்படும்
♦ இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் இயற்றப்படும்
♦ எந்த இனத்திற்கும் சிறப்புரிமை கிடையாது, எல்லா இனத்தவரும் சமமாக நடத்தப்படுவர்.
♦ வரும் நவம்பர் மாதம் முதல் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணியலாம்.

